மத்திய- மாநில அரசுகளை எதிர்த்து இடதுசாரிகள் தொடர்ந்து போராடுவோம்: ஜி.ஆர்., மகேந்திரன் உறுதி
மதுரை: மத்திய மாநில அரசுகளின் ஊழல் முறைகேடுகளை எதிர்த்து தொடர்ந்து இணைந்து போராடுவோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
மத்திய மாநில அரசுகளின் லஞ்சம், முறைகேடு, ஊழலுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் இன்று மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி மகேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:
ஊழல் பாஜக
மோடி ஆட்சிக்கு வந்ததும் ஊழலற்ற நேர்மையான ஆட்சி கொடுப்போம் என்று கூறினார். ஆனால் மத்திய பிரதேசத்தில் வியாபம் ஊழல் நடந்துள்ளது. இதில் அந்த மாநிலத்தின் முதல்வரே சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த ஊழல் விசாரணை நடந்து கொண்டு இருக்கும்போதே 46 பேர் மர்மமான முறையில் இறந்து இருக்கிறார்கள்.
பாரதிய ஜனதா ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்திலும் ரூ.36 ஆயிரம் கோடி வரை ரேசன் அரிசியில் ஊழல் நடந்து இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இது போன்று மத்திய அரசு பல்வேறு ஊழல்களில் சிக்கி உள்ளது.
லலித் மோடி
ரூ.1500 கோடி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள லலித்மோடி வெளிநாட்டுக்கு செல்ல மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவி உள்ளனர். இவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
தமிழக ஊழல்
தமிழகத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. ஊழல் புகாரும் எழுந்துள்ளது. இதை தடுக்க இடதுசாரிகள் போராடும்.
இவ்வாறு ராமகிருஷ்ணன் பேசினார்.
புதிய சகாப்தம் உருவாக்கம்
இதனை தொடர்ந்து பேசிய மகேந்திரன், இடதுசாரி கட்சிகள் புதிய அரசியல் சகாப்தத்தை உருவாக்கி வருகிறது. மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசை அகற்ற தொடர்ந்து போராடுவோம். இந்தியா முழுவதும் ஊழல் மயமாகி உள்ளது என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய- மாநில அரசுகளின் லஞ்சம், முறைகேடு, ஊழலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.












Click it and Unblock the Notifications