பிரதமரை விமர்சித்தால் ரெய்டு என்பது ஜனநாயக விரோதமானது - முத்தரசன் பாய்ச்சல்
சென்னை : மத்திய அரசை விமர்சிப்பவர்கள் மீது வருமான வரித்துறை பாய்வது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என்று சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
நேற்று காலை முதல் சசிகலா மற்றும் தினகரனின் உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என பலரது வீட்டிலும், அலுவலகத்திலும் திடீரென வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். 180க்கும் மேற்பட்ட இடங்களில் 1800க்கும் அதிகமான அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஜெயா டிவி அலுவலகம், கொடநாடு எஸ்டேட் அலுவலகம், ஜாஸ் சினிமாஸ், மிடாஸ் மதுபான ஆலையில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது.

சமீபத்தில் நடந்த ரெய்டுகளிலேயே இது தான் மிகப்பெரியது என்று அதிகாரிகள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இதை அரசியல் பழி வாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் சி.பி.ஐ மாநிலச்செயலாளர் முத்தரசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது, பிரதமரையோ மத்திய அரசையோ யார் விமர்சித்தாலும் அவர்கள் மீது வருமான வரித்துறையின் சோதனை பாய்கிறது. அரசியல் காரணங்களுக்காக வருமான வரித்துறையைப் பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானது. இதுபோல் சோதனைகள் மூலம் தமிழகத்தில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்று துடிக்கிறது பா.ஜ.க.
ஆனால், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸை ஏற்றுக்கொண்ட மாநிலமான தமிழகத்தில் பா.ஜ.க.,வால் எப்போதும் வெற்றி பெற முடியாது.வகுப்புவாதத்திற்கும், பாசிஸ அரசாங்கத்திற்கும் எதிராக ஜனநாயக, மதச்சார்பற்ற சக்திகள் எல்லாம் ஓர் அணியில் இணைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதுஎன்று முத்தரசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications