சிவகங்கை மாவட்டம் கீழடியில் கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன்
சென்னை: மதுரை, கீழடி அருகில் களஅருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என்று தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். கோவை வன்முறை சம்பவத்தை காவல்துறையினர் தடுக்க முயற்சி செய்யவில்லை என்றும் ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி கிராமத்தில் கடந்த இரண்டாண்டுகளாக மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழ்வாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற அகழ்வாய்வில் 5 ஆயிரத்து 300 தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. 71 தமிழ் பிராமி எழுத்துக்கள் சுடுமண் பானை ஓடுகளில் கிடைத்துள்ளன. அதில் பிராகிருதம் உள்ளிட்ட வேற்றுமொழி பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கிரேக்கம், ரோமாபுரி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் தமிழர்களுக்கு இருந்த வர்த்தக தொடர்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
கீழடியில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலேயே நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசு, கீழடியில் கிடைத்த தொல்பொருட்களை பெங்களூருவில் உள்ள தேசிய அகழ்வாராய்ச்சி மையத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உயர்நீதிமன்றலும் பெங்களூரு கொண்டு செல்ல இடைக்கால தடை விதித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் அருங்காட்சியம் அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழங்கால தமிழர் நாகரிகத்தை அறிய உதவும் பொருட்கள் கீழடியில் கிடைத்துள்ளன என்றும், ஆய்வில் கிடைத்த பொருட்களை அங்கேயே காட்சிபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
கீழடி அருகில் அருங்காட்சியகம் அமைத்தால் இந்தப் பொருட்களை இங்கேயே வைத்து பாதுகாப்பதோடு வருங்காலத்தலைமுறை, பழந்தமிழர் நாகரிகத்தை அறிந்துகொள்ள உதவியாக இருக்கும். இதற்கு இரண்டு ஏக்கர் நிலப்பரப்பு கீழடிக்கு அருகில் தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை தமிழக அரசு இதற்கான இடத்தை ஒதுக்கித்தரவில்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக அருங்காட்சியகத்திற்கான இடத்தை ஒதுக்கி தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை செய்யப்பட்ட பின்னர் இறுதி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் கோவை நகரம் முழுவதும் பொதுச் சொத்துக்கும், தனியார் சொத்துக்கும் கடும் சேதத்தை விளைவித்துள்ளதோடு, நகரத்தின் இயல்பு வாழ்க்கையை ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறார்கள்.
காவல்துறை இந்தக் கொலைக்கு பின்னர், இத்தகைய நிலையை எதிர்பார்த்திருக்க வேண்டும். எந்தவொரு கொலை நடந்தாலும் அதனை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதற்காக, பொதுச் சொத்துக்களை அழித்தொழிப்பது என்பதை வன்முறையாளர்கள் தங்கள் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறை இந்த வன்முறையை தடுக்கத் தவறிவிட்டது என்றும் ஜி. ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.