மக்கள் நலக் கூட்டணி தொடர வேண்டும்.. ஜி.ராமகிருஷ்ணன் விருப்பம்
சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணிக்குப் பெரும் தோல்வி கிடைத்திருந்தாலும் கூட கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மக்கள் நலக் கூட்டணி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அந்தக் கூட்டணியுடன் தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட்ட தேமுதிக, தமாகவும் படு தோல்வி அடைந்தன. இந்த நிலையில் இந்தத் தோல்வி பின்னடைவுதான் என்றாலும் கூட்டணி மக்கள் நலக் கூட்டணி நீடிக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள ஒரு பேட்டி:
இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்று அரசியல் என்ற எங்களது நோக்கம் இன்னும் அப்படியேதான் உள்ளது. அதற்காக தொடர்ந்து பாடுபட மார்க்சிஸ்ட் கட்சி ஆர்வமாக உள்ளது. இதற்கு மக்கள் நலக் கூட்டணி நீடிக்க வேண்டியது அவசியம் என்பது எங்களது கருத்து. மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே, திமுக அதிமுகவுக்கு மாற்றான அரசியலைக் கொடுக்க முடியும்.
நாங்கள் தோற்கடிக்கப்பட்டுள்ளோம். ஆனால் மாற்று அணி என்பதில் எந்தக் கருத்து முரண்பாடும் இருக்க முடியாது. அதை சந்தேகிக்க முடியாது. மாநில நலனுக்காக மக்கள் நலக் கூட்டணி தொடர வேண்டும் என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம்.
இருப்பினும் இதுதொடர்பாக மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள்தான் கூடிப் பேசி முடிவெடுக்க வேண்டும். கூட்டணி நீடிக்க வேண்டுமா, கலைக்கப்பட வேண்டுமா என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
மக்கள் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும். மக்களுக்கு உழைக்க வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமையாகும். அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து சதெய்யும். 50 ஆண்டு கால திராவிட ஆட்சிகளிடமிருந்து தமிழகத்தை மீட்கும் போராட்டத்தைத் தொடருவோம்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மிகப் பெரிய அளவில் பணத்தை செலவிட்டன. இதுதான் எங்களது தோல்விக்கு முக்கியக் காரணம். அதேபோல நேரமின்மையும் கூட எங்களுக்குப் பாதகமாக அமைந்து விட்டது. மேலும் எங்களது கூட்டணியின் பிரச்சாரங்களுக்கு ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் தரவில்லை. எங்களது பிரச்சாரங்களை அதிக அளவில் பிரசுரிக்கவில்லை, ஒளிபரப்பவில்லை என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.