கடலூரை விடாமல் விரட்டும் மழை: ஏரிகளில் நீர் திறப்பால் ஊருக்குள் புகுந்த வெள்ளம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் கனமழையால் நூற்றுக்கணக்கான கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல ஆயிரம் கிராம மக்கள் மீண்டும் முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏரிகள் நிரம்பி வழிவதால் வெள்ளநீர் வெளியேற்றப்படுகிறது. ஆறுகளில் கட்டுக்கடாமல் வெளியேறும் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மீண்டும் ஒரு துயரத்தை சந்தித்துள்ளனர் கடலூர் மாவட்ட மக்கள்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரால் சூழப்பட்டதோடு, குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது.
தொடர் கனமழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பெருமாள் ஏரியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், அதன் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதே போன்று தென்பென்னையாறு, வெள்ளாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் ஈடுபட்டு வந்தபோதிலும் மழை பெய்து கொண்டே இருப்பதால் அப்பணியில் சிக்கல் நீடிக்கிறது.
நெய்வேலி நிலக்கரி சுரங்கம்
நெய்வேலி என்.எல்.சி.யில் உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களிலும் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளதால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தியும் கடுமையாக குறைந்து வருகிறது. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் சுற்றி உள்ள கிராமங்களில் மழைநீர் புகுந்துள்ளது.
மூழ்கிய கிராமங்கள்
கடந்த நவம்பர் 8, 9ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் இந்த சுரங்கங்களில் மழைநீர் தேங்கியது. இதனை ராட்சத மோட்டார்கள் மூலம் என்.எல்.சி. நிர்வாகம் வெளியேற்றியது. அப்போது, சுரங்க நீரும், மழை நீரும் சேர்ந்ததால் அங்குள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள கிராமங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளது.
சாலைகள் சேதம்
கடலூர்-சிதம்பரம் சாலையில் கடலூர் முதுநகரிலிருந்து சிப்காட் குடிகாடு வரை கடந்த 6 நாள்களாகவே தண்ணீர் சென்றவண்ணம் உள்ளது. இதனால் சாலை பல இடங்களில் சேதம் அடைந்துள்ளது. ஏற்கனவே கடலூர் மாவட்ட சாலைகள் பல இடங்களில் மரணகுழிகளாக மாறிவிட்டன.
வெள்ள அபாய எச்சரிக்கை
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43.40 அடியாக அதிகரித்துள்ளது.ஏரிக்கு விநாடிக்கு 6000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து 5310 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து 2558 கனஅடி நீர் வெள்ளியங்கால் ஓடையில் திறக்கப்பட்டு வருவதால் ஏரியை சுற்றி உள்ள 25 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடலூர் பெருமாள் ஏரியில் இருந்து விநாடிக்கு 20,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருவதால், அதன் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தொடர்மழை வெள்ளம்
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடலூர் மாவட்டம் கடந்த நவம்பர் 30ஆம் தேதி இரவு முதல் மீண்டும் கனமழைக்கு உள்ளானது. இந்த கனமழை கடலூர் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளை முழுவதுமாக பாதித்துள்ளது.தேங்கிய தண்ணீரை வடிய வைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளி, சனிக்கிழமைகளில் விட்டு, விட்டு பெய்த மழையால் அந்த முயற்சிக்கு பலனில்லை. கடலூர் நகரம் மற்றும் புறநகரில் தேங்கிய தண்ணீர் வெளியேறவில்லை.
தவிக்கும் மக்கள்
கடந்த ஒரு மாதத்துக்குள் 3 கனமழைகள் கடலூர் மாவட்டத்தைத் தாக்கியுள்ளதால் அம்மாவட்ட மக்கள் திக்கற்று தவிக்கின்றனர். பொதுமக்கள் உணவு, குடிநீர் தேவைக்கு அரசையும், தன்னார்வ தொண்டு அமைப்புகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது என்பதுதான் வேதனை.