நெல்லை, தூத்துக்குடிக்கு அழியாத மை, புதிய ரூ.500 வருவதில் தாமதம்: மக்கள் தவிப்பு
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி வங்கிகளுக்கு அழியாத மை மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகள் வராததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவதை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடியில் காலை முதலே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றனர். அந்தந்த வங்கிகளில் கணக்கு உள்ளவர்கள் வழக்கம் போல் பணத்தை டெபாசிட் செய்து வருகின்றனர்.
பணம் மாற்ற வருபவர்களுக்கு வைக்கப்படும் அழியாத மை இதுவரை இருமாவட்ட வங்கிகளுக்கும் வரவில்லை. இதே போன்று புதிய 500 ரூபாய் நோட்டும் இதுவரை வந்து சேரவில்லை. ஆனால் நெல்லை, பாளையங்கோட்டை, கோவில்பட்டி, அம்பாசமுத்திரம் உள்ளிட்ட தலைமை தபால் நிலையங்களுக்கு அழியாத மை வந்துள்ளது. அங்கு பணம் மாற்ற வருபவர்களின் விரலில் அழியாத மை வைக்கப்பட்டது.
ஏடிஎம்களிலும் பணம் போடப்பட்டதும் வழக்கம் போல் நீண்ட வரிசையில் நின்று மககள் பணத்தை எடுத்தனர். தானியங்கி டெபாசிட் இயந்திரம் வழக்கம் போல் இயங்கியதால் அதிலும் பலர் நீண்ட வரிசையில் நின்று டெபாசிட் செய்தனர். புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் வராததால் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.