மாண்டவரும் மீண்டவரும் யார் யாரோ? நெஞ்சை பிளக்கிறது குமரி மீனவர் கிராமங்களின் பேரிழப்பு!
குமரியில் இருந்து பெருந்துயரையும் பேரிழப்பையும் சுமந்து கொண்டே வருகின்றன அத்தனை செய்திகளும்..
நாகர்கோவில்: கன்னியாகுமரி கடலோர மீனவர்கள் கிராமங்களில் இருந்து உறுதிப்படுத்தப்படாமல் வந்து விழும் செய்திகள் பேரிடிகளாக இருக்கின்றன. ஒவ்வொரு மீனவர் கிராமமும் நினைத்துப் பார்க்க முடியாத பேரிழப்பிலும் பெருந்துயரச் சுழலிலும் சிக்கியிருப்பதை உணர முடிகிறது.
வரலாறு காணாத ஓகி புயலில் சிக்கி பெருந்துயரை எதிர்கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் தென்கோடி முனை. கன்னியாகுமரியின் ஒவ்வொரு மீனவ கிராமமும் கடலுக்குப் போன ரத்த உறவுகளுக்காக கதறலுடன் காத்திருக்கிறார்கள்.
ஆளில்லா தீவுகள்...
மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா ஏன் பாகிஸ்தான், ஓமன் என எங்கெங்கோ தொலை தூர கடல் தேசங்களின் கரைகளிலேயே குமரி மண்ணின் மைந்தர்கள் கரை ஒதுங்கியிருக்கிறார்கள். மாலத்தீவிலும் இந்தியப் பெருங்கடலின் ஆளில்லா தீவுகளிலும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது நம் உறவுகள் என்கின்றன செவிவழி செய்திகள்.
ஆயிற்று 10 நாட்கள்
ஆனால் உருண்டோடிவிட்டன 10 நாட்கள்... கடலுக்குள் போனவர்கள் இத்தனை பேர்... அங்கெங்கே கரை ஒதுங்கியவர்கள் இத்தனை பேர்.. வீடு திரும்புகிறவர்கள் இத்தனை ஆட்கள்.. நிவாரணம் கொடுக்கப்பட்டவர்கள் இவர்கள் எல்லாம் என்கிற ஒரு பட்டியலைக் கூட தமிழக அரசு வெளியிடவே இல்லை..
மீண்டவர் யாரோ?
அதேநேரத்தில் மார்த்தாண்டன்துறையில் மாண்டவர்கள் 80 பேர் என்கிறது ஒரு போஸ்டர்.. நீரோடியில் ஓகி பலி கொண்டது 35 பேர் என்கிறது ஒரு போஸ்டர்..
இப்போது குமரி மாவட்ட ஆட்சியரோ 601 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்கிறார்... மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரோ, காணவில்ல புகார் கொடுங்கள். என்கிறார். இத்தனை நாள் மீனவர்கள் கதறியது உண்மைதானோ என நெஞ்சம் பதைத்துக் கொண்டே இருக்கிறது.
முன்னோட்டமா?
கன்னியாகுமரியில் வரலாறு காணாத பேரிழப்பும் பெருந்துயரமும் சூழ்ந்திருக்கிறது.. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கான முன்னோட்டங்கள்தான் இத்தனையுமோ? என்பதுதான் தமிழகத்தின் கேள்வி.