குமரியை சூறையாடிய ஓகி... ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன- மின்கம்பங்கள் சரிந்தன! #ockhi
ஓகி புயல் குமரி மாவட்டத்தை சூறையாடி வருகிறது. 500 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. 900 மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன.
Recommended Video
கன்னியகுமாரி: ஓகி புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை சின்னாபின்னமாக்கி வருகிறது. இதுவரை 1000க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும், 900 மின்கம்பங்கள் முறிந்து விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் ஓகி புயலாக உருவாகி உள்ளது.
கன்னியாகுமரி அருகே 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி
புதிதாக உருவான ஓகி புயலால் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யுக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரில் மணிக்கு 40-50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.
வெள்ளப்பெருக்கு
பலத்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1000-க்கும் அதிகமான மின்கம்பங்கள் சாய்ந்தன
சுழன்றடிக்கும் சூறைக்காற்று கனமழை குமரி மாவட்டத்தில் நீடிப்பதால் பல்வேறு இடங்களில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. 900 மின்கம்பங்கள் முறிந்துள்ளதால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டுள்ளது.
சூறைக்காற்றுக்கு சாயும் மரங்கள்
இந்த புயல் சின்னம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரைக்காற்று வீசி வருவதுடன், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரப்பர் மரங்களில் கீழ் நிற்காதீர்கள்
மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது தொடர்ந்த வண்ணம் உள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம் என்றும் குறிப்பாக ரப்பர் மரங்கள் கீழ் நிற்க வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். '
பாதுகாப்பு அவசியம் மக்களே
ஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கன்னியாகுமரி கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நகர்வதை ரேடாரில் காணமுடியும் என்று தெரிவித்துள்ளார் ஓகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளில் இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கன்னியாகுமரியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் பல வீடுகளின் மீது மரங்கள் விழுந்துள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிப்புக்குள்ளான மக்களை மீட்கவும், புயல் பாதிப்புகளை சீரமைக்கவும் அரக்கோணத்தில் இருந்து 70 பேர் கொண்ட பேரிடர் மீட்புக்குழு குமரி மாவட்டத்திற்கு விரைந்துள்ளது.