புயல் சின்னம் எதிரொலி... தூத்துக்குடி, நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
தூத்துக்குடி : புயல் சின்னம் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் இலங்கையின் தெற்கு பகுதியில் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம், கேரளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையால் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், நாட்டுபடகுகள் கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் வேம்பார் முதல் பெரியதாழை வரையிலான பகுதிகளில் நாட்டு படகுகள் முதல் கட்டுமரங்கள், வல்லங்கள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை கடலுக்கு செல்லவில்லை. மணப்பாடு கிராமத்திலும் விசைப்படகுகள், பைபர் படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
புயல் சின்னம் எதிரொலியாக தூத்துக்குடி, முத்தையாபுரம், புதுக்கோட்டை, நெல்லை பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கடற்கரை பகுதிகளான உவரி, கூடுதாழை, பெரியதாழை, கூட்டப்பனை, கூத்தன்குளி, இடிந்தகரை, தோமையர்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. அப்பகுதி மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி காற்றில் இழுத்து செல்லப்படாமல் இருக்க கயிறு வைத்து கட்டி நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இதே போன்று கடல் சீற்றம் காரணமாக நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி பகுதியில் 18 கிராம மீனவர்கள் இரண்டாவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.