பல்லாவரம் அருகே சொகுசு காரில் வந்து கொள்ளை... புதிய பவாரியாக்களா?- போலீசார் தீவிர விசாரணை
பல்லாவரம் அருகே 5 கார்களில் வந்து தொழிலதிபரிடம் கொள்ளையடிக்க முயன்ற கர்நாடக இளைஞர்கள் 11பேரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம்: தொழிலதிபரை தாக்கி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற கர்நாடக இளைஞர்கள் 11பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த துரைபாக்கத்தில் வசித்து வருபவர் பாபு. இவர் தனது ஸ்கிராப் கம்பெனிக்கு பழைய இரும்பு பொருட்களை எடுக்க ரேடியல் சாலையில் உள்ள இரும்பு கிடங்கிற்கு நேற்று இரவு தனது ஊழியர்களுடன் வந்துள்ளார்.

கடையில் வாங்கப்பட்ட இரும்புகளை தனது லாரியில் அவரும் அவரது ஊழியர்களும் ஏற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு கர்நாடக பதிவு எண்ணுடன் மின்னல் வேகத்தில் ஐந்து கார்கள் வந்தன. அதில் இருந்து இறங்கிய 20க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில இளைஞர்கள், பாபு மற்றும் அவரது ஊழியர்கள் மூவரையும் கொடூரமாக தாக்கினர்.
பின்னர் அனைவரையும் கத்தி முனையில் மிரட்டிய அந்த இளைஞர்கள், பாபு வைத்திருந்த பல லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக பல்லாவரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் 11 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களின் கார்களில் சோதனை செய்தபோது அதில் பயங்கர ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. தப்பியோடிய எஞ்சிய 9பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 1999களின் இறுதியில் லாரிகளில் வந்து தமிழகத்தில் கொள்ளையடித்து போகும் வட இந்திய பவாரியா கொள்ளையர்களைப் போல சொகுசு கார்களில் வலம்வந்து கொள்ளையடிக்கும் இந்த கும்பலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications