மிக்சர் கடையில் வேலை பார்த்து படிக்க வைத்த தந்தை.. ப்ளூவேலுக்கு இரையான விக்னேஷின் உறவினர்கள் கதறல்
Recommended Video
சென்னை: ப்ளூவேல் விளையாட்டுக்கு பலியான மதுரை மாவட்ட கல்லூரி மாணவரின் தந்தை மிக்சர் கடையில் வேலை பார்த்து அவரை படிக்க வைத்துள்ளார்.
இவர் மதுரை மாவட்டம் விளாச்சேரியைச் சேர்ந்த வனிதா, ஜெயமணி என்பவரின் மகன் விக்னேஷ். இவர் திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். ப்ளூவேல் விளையாட்டால்தான் இந்த தற்கொலை நடந்துள்ளது. அவரது கையில் திமிங்கில படம் பச்சை குத்தப்பட்டுள்ளது இதை உறுதி செய்துள்ளது.
கூலித்தொழிலாளிகள்
இதுகுறித்து விக்னேஷ் உறவுக்கார பெண்மணி ஒருவர் கூறுகையில், விக்னேஷின் பெற்றோருக்கு படிப்பறிவு கிடையாது. கூலித்தொழிலாளிகள். விக்னேஷ் தந்தை மிக்சர் கடையில் வேலை பார்த்து தனது மகனை கல்லூரியில் படிக்க வைத்தார். ஆனால் இப்படி கேம் விளைாயாடி அவன் தற்கொலை செய்வான் என எதிர்பார்க்கவில்லை.
கண்டுபிடித்த சகோதரர்
இதுகுறித்து விக்னேஷ் சகோதரர் கூறுகையில், இரவு 11 மணி முதல் 2 மணிவரை கூட இரவு விக்னேஷ் கேம் ஆடுவது வழக்கம். தொடர்ந்து 2 நாட்களாக இப்படித்தான் செய்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். செல்போனை கொடு என்று நான் கேட்ட போது கூட தர மறுப்பான். திடீரென செல்போனில் மெசேஜ்கள் வரும். அதை படித்தபடியே இருப்பான். எதையோ யோசித்தபடியே இருந்தான். மனநலம் பாதிக்கப்பட்டவனை போல ஆகிவிட்டான் என்றார்.
சைபர் மையங்கள்
மாணவர்களிடம் செல்போன் இல்லாவிட்டாலும் சைபர் மையங்களுக்கு சென்று இந்த விளையாட்டு ஆடப்படுகிறது என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மாநிலம் முழுக்க இணையதள மையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
பெற்றோர்களின் பங்கு
குழந்தைகளை, பெற்றோர்கள் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்பதே போலீசார் வழங்கும் அறிவுரையாக உள்ளது. செல்போனை எடுத்துக்கொண்டு இரவில் தனியாக படுக்கப்போகிறேன் என குழந்தைகள் கூறினால் அதை அனுமதிக்காதீர்கள் என்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி மகேஷ்குமார் எச்சரித்தார்.