நேற்று நல்ல நாள் இல்லை என்பதால் இன்று ஜெ. மனு தாக்கலாம்!
சென்னை: ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய நேற்றே திட்டமிட்டிருந்தனராம் அதிமுகவினர். ஆனால் நேற்று நல்ல நாள் இல்லை என்பதால் அதைத் தள்ளி வைத்து விட்டனராம்.
ஜெயலலிதா சிறைக்குப் போய் இன்றோடு 13 நாட்கள் ஆகிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் போய் விட்டது. இதனால் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலைக்கு அதிமுக போயுள்ளது.
இதற்கான பூர்வாங்க வேலைகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட அன்றே தொடங்கி விட்டது. அன்று நள்ளிரவே தீர்ப்பு நகலை அதிமுக வக்கீல்கள் வாங்கி விட்டனர். இதையடுத்து ஜாமீன் மனுவை தயார் செய்யும் பணிகள் தொடங்கி விட்டன.
உச்சநீதிமன்றத்தில் நேற்றே மனுவைத் தாக்கல் செய்ய முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் நேற்று சந்திர கிரகணம். மேலும் ஜெயலலிதாவின் ராசிக்கும் நேற்று உகந்த நாள் இல்லை என்று வக்கீல்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நேற்று மனுத் தாக்கல் செய்வதா வேண்டாமா என்ற குழப்பம் வந்துள்ளது. இதுதொடர்பாக நேற்று ஜெயலலிதாவை சிறையில் சந்தித்த அதிமுக வக்கீல்கள் இதுகுறித்தும் ஜெயலலிதாவிடமே கேட்டுள்ளனர். அவரும் பாசி்டிவாக பதில் சொல்லவில்லை என்று தெரிகிறது.
இதனால் நேற்று மனு தாக்கல் செய்வதை வக்கீல்கள் தள்ளி வைத்து விட்டனர். இன்றைக்குள் அவர்கள் மனுத் தாக்கல் செய்வார்கள் என்று தெரிகிறது.
அதேசமயம், இன்று கட்டாயம் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்தே ஆக வேண்டும். ஏனென்றால் இன்று மனு தாக்கல் செய்தால்தான் குறைந்தது நாளை மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. நாளை செய்தால் அடுத்து சனி, ஞாயிறு குறுக்கிடுவதால் திங்கள்கிழமை வரை காத்திருக்க வேண்டி வந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.