“வீட்டை சூறையாடி சான்றிதழ், பணத்தை எடுத்துச் சென்றார்”.. முன்னாள் பாமக எம்எல்ஏ மீது மகள் பரபர புகார்
கள்ளக்குறிச்சி: பாமக முன்னாள் எம்.எல்.ஏ காசாம்பு பூமாலையின் மகள், தமது தாயார் மீது புகார் அளித்துள்ளார். ஆதரவாளர்களுடன் வீடு புகுந்து கல்விச் சான்றிதழ், பணம், பொருட்களை அபகரித்துச் சென்றதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
பாமக முன்னாள் எம்எல்ஏ காசாம்பு பூமாலையின் மகள் ஆனந்த நாயகி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் மந்தைவெளி பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார்.

அதில், கடந்த 2023 ஆம் ஆண்டு தன் மீதும் தனது குடும்பத்தார் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய தனது தாயார் முன்னாள் எம்.எல்.ஏ காசாம்பு பூமாலை தனது ஆதரவாளர்களுடன் வந்து தான் வசித்து வந்த வீட்டில் பூட்டை உடைத்து தாக்கி பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டதாக குற்றம்சாட்டி உள்ளார். தனது மகள்களின் கல்விச் சான்றிதழ் உட்பட பணத்தையும் பொருட்களையும் எடுத்துச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது வீட்டில் அத்துமீறி நுழைந்து கல்விச் சான்றிதழ், பணம், பொருள் ஆகியவற்றை எடுத்துச் சென்ற தமது தாயார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி காவல் நிலையம், டிஎஸ்பி அலுவலகங்களில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆட்சியர் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு தனது பொருட்களையும், மகளின் சான்றிதழையும் மீட்டுத் தர வேண்டும் எனக் குறிப்பிட்டு புகார் அளித்துள்ளார்.
மேலும், தன் வீடு தாக்கப்பட்ட போது எடுத்த வீடியோ பதிவையும் ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளார் ஆனந்த நாயகி. தமது தாயார் மீது மகளே புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காசாம்பு பூமாலை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இவர் பாமக சார்பில் 2001 சட்டமன்றத் தேர்தலில் சங்கராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.எல்.ஏ ஆனார்.












Click it and Unblock the Notifications