திரையுலகின் சகாப்தம் பாலச்சந்தர்: ஸ்டாலின், மனோரமா, இளையராஜா அஞ்சலி
சென்னை: பாலசந்தரின் மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் பாலச்சந்தர் என்றும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த கே. பாலச்சந்தர் உடலுக்கு திரையுலக பிரமுகர்கள் பலரும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள பாலச்சந்தர் வீட்டில், அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இளையராஜா அஞ்சலி
இன்று காலை ஏவிஎம் சரவணன், இசையமைப்பாளர் இளையராஜா, ஆகியோர் பாலச்சந்தர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், நடிகர்கள் சாருஹாசன், ரவி ராகவேந்திரா உள்ளிட்டோரும் ஏராளமான நடிகைகளும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மனோரமா கண்ணீர்
அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்த மனோரமாவை செய்தியாளர்கள் சந்தித்த போது, மிகவும் பெருந்தன்மையானவர் அவர் என்று உணர்ச்சி பொங்க கூறினார்.
ஸ்டாலின் அஞ்சலி
இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் மறைவுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''பாலசந்தரின் மறைவு திரைதுறைக்கு பேரழிப்பு என்றார்.
பாலச்சந்தர் ஒரு சகாப்தம்
திரையுலகின் சகாப்தமாக திகழ்ந்தவர் பாலச்சந்தர். ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களை உருவாக்கிய மாபெரும் சகாப்தம், பாலசந்தர். கலைஞர் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் கொண்டவர்.
முடிசூடா மன்னர்
நாடக உலகில் மட்டுமின்றி, திரைத்துறை, சின்னத்திரையிலும் முடிசூடா மன்னராக விளங்கினார் கே.பாலச்சந்தர்
சமூக அக்கறை
திரைத்துறை மட்டுமின்றி சமூக பணியிலும் அதிக அக்கறை கொண்டவர். நான் மேயராக இருந்த போது அதிகளவில் ஊக்கமளித்தவர் அவர்'' என ஸ்டாலின் தெரிவித்தார்.