கொந்தளிக்கும் கடல்.. 48 மணி நேரத்திற்கு யாரும் போகாதீர்கள்... எச்சரிக்கும் ரமணன்!
சென்னை: வட தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அடுத்த 48 மணி நேரத்துக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கும் போது வலுவிழக்கும் என்றும், வானிலை மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் விசாகப்பட்டினத்திற்கு தென் கிழக்கே 560 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது என்றும், இது 9 ஆம் தேதி காலை ஆந்திர பிரதேசத்தின் கரையை நெருங்கும்போது வலுவிழக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஆந்திர கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்பில்லை. என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.
வட தமிழகத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. எனவே, வட தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகின்றனர் என ரமணன் தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் அவர் கூறினார்.