சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை: தீபா பேட்டி
சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். மேலும் ஒரு குறிப்பிட்ட குடும்பம் ஆட்சியை கைப்பற்றிவிடக் கூடாது எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட அமளியினால் 2 முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது. 3 வது முறையாக 3 மணிக்கு அவை மீண்டும் தொடங்குவதற்குள் திமுகவினரை வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார். இதனால் சட்டசபை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 122 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்ததால் அவர் வெற்றி பெற்றார் என்று சபாநாயகர் அறிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நேர்மையாக நடைபெறவில்லை எனக் கூறி எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து புகார் அளித்தார். பின்னர் மெரினாவில் உள்ள காந்தி சிலை அருகில் ஸ்டாலின் உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவரோடு கூடிய திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட அனைவரையுமே காவல்துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
இந்நிலையில் சென்னை தி.நகர் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா கூறுகையில், சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு ஜனநாயக படுகொலை. அரசை எதிர்த்து மக்கள் பல்வேறு வழிகளில் தங்களின் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட குடும்பம் ஆட்சியை கைப்பற்றி விடக்கூடாது என்றார்.