விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 24-க்கு ஒத்திவைப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி, 2012 ஆகஸ்ட் 28ஆம் தேதி திருவண்ணாமலையில் நடைபெற்ற நல உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக அரசையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் விஜயகாந்த் அவதூறாகப் பேசியதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் அன்பழகன் 2013 ஜனவரி 24ஆம் தேதி வழக்குத் தொடுத்தார்.
இந்த வழக்கு திங்கள்கிழமை (செப்.16 ஆம் தேதி) விசாரணைக்கு வந்தது.
அப்போது, விஜயகாந்த் சார்பில் ஆஜரான தேமுதிக வக்கீல் பிரிவு மாவட்டச் செயலர் காளிங்கன், குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 317-ன் படி விஜயகாந்த் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு மனுதாக்கல் செய்தார்.
ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட விலக்கு அளிக்கக் கோரும் மனு மீதான எதிர் உரையை அரசு வக்கீல் தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அக்டோபர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து திருவண்ணாமலை குற்றவியல் நீதித்துறை நடுவரும், திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான (பொறுப்பு) குருமூர்த்தி உத்தரவிட்டார்.