Exclusive: வீட்டு பிரசவம் வேண்டாம்.. விபரீதம் ஏற்படும்.. அரசு பெண் மருத்துவரின் எச்சரிக்கை அட்வைஸ்
பிரசவங்கள் மருத்துவமனையில்தான் நடைபெற வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Recommended Video
சென்னை: நம்ம தமிழ்நாட்டில் என்ன நடந்துட்டு இருக்குன்னே புரியல. இப்போ வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் படலம் போல. எங்க பார்த்தாலும் தன் மனைவிக்கு தானே பிரசவம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள் கணவன்மார்கள். திருப்பூரில் யு-ட்யூப்-ல பிரசவம் பார்த்து 21 வயசு அநியாயமா பெண்ணை பறிகொடுத்துமா இந்த நிலைமை தொடர்கிறது? நேற்று தேனியிலும் ஒருவர் தன் மனைவிக்கு பிரசவம் பார்த்ததுடன், குழந்தையின் தொப்புள் கொடியைகூட அறுக்க விடாமல் போலீசாரிடமும், அரசு மருத்துவர்களிடமும் தகராறு செய்திருக்கிறார்.
சரி, மக்கள் ஏன் இப்படி இறங்கிவிட்டார்கள்? அவர்களுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை போய்விட்டதன் வெளிப்பாடா இது? அரசு மருத்துவர்கள் கர்ப்பிணியின் உயிரை வாங்கிவிடுபவர்கள் என்ற பிம்பம் ஏற்பட்டுள்ளதா? எதற்காக இந்த விபரீதம் தற்போதைய சூழலில் ஏற்பட்டு வருகிறது என்பதை அறிய "ஒன் இந்தியா" முற்பட்டது. ஒரு கர்ப்பிணிக்கு வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது நல்லதா, அல்லது மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பது நல்லதா என்பதை அறிந்து வாசகர்களுக்கு தெளிவுபடுத்த "ஒன் இந்தியா" எடுத்துக் கொண்ட ஒரு சிறு விழிப்புணர்வு செய்திதான் இது.
வீட்டு பிரசவமா? மருத்துவமனை பிரசவமா? இந்த கேள்வியை ஒரு அரசு மகப்பேறு மருத்துவரிடம் கேட்க முற்பட்டோம். இதற்காக திருமதி டாக்டர் மாலதி என்பவரை சந்தித்தோம். டாக்டர் மாலதி, ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் 17 வருடங்களாக மகப்பேறு மருத்துவராக பணியாற்றிவர். ஆளுநர் ரோசய்யாவிடம் "மக்கள் மருத்துவர்" என்ற விருதினையும் பெற்றவர் என்பதால் அவரிடமே இந்த கேள்வியை கேட்டால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.
கேள்வி: அரசு மருத்துவமனைகள் பல்கி பெருகி இருக்கும்போது, மக்கள் ஏன் வீட்டு பிரசவத்தை விரும்புகிறார்கள்? அரசு மருத்துவமனை மேல் அப்படி என்ன கோபம் மக்களுக்கு?
பதில்: அப்படி இல்லை. அந்த காலத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்த்தாலும், அதிலும் ஆபத்துகள் இருக்கத்தான் செய்தது. அதனால் தாய்-சேய் உயிரிழப்பு விகிதம் அப்போது அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது அந்த இறப்பு விகிதமானது குறைந்துள்ளது. அதற்கு காரணம் மருத்துவமனையில் பிரசவம் பார்ப்பதுதான். ஆனால் இதனை மக்கள் புரிந்துகொள்வதில்லை. சில மக்களுக்கு என்ன தோன்றுகிறது என்றால், மருத்துவமனையில் கர்ப்பிணியை அனுமதித்தாலே ஆபரேஷன்தான் என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். அந்த ஒரே பயம்தான் வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். நாங்கள் வேண்டுமென்றே ஆபரேஷனை செய்வதில்லை.
கேள்வி: பெரும்பாலும் மருத்துவமனையில் கர்ப்பிணிகளை அனுமதித்தால், டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்து குழந்தை எடுத்துவிடுகிறார்கள் ஒரு எண்ணம் உள்ளதே.. அது சரிதானா?
அந்த காலம் மாதிரி 7, 8 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் காலம் இல்லை. ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வதற்கான காலமும், வசதியும், சூழலும் உள்ளது. குழந்தையின் தலை திரும்பி பிரசவிக்க வேறு வழி இல்லாத நேரத்தில்தான் சிசேரியன் செய்ய நேரிடுகிறது. இன்னொன்று, குழந்தையின் தலையில் கொடி கழுத்தில் சுற்றிக் கொண்டாலோ, அல்லது பனிக்குடம் உடைந்து, கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்படாமல் போய்விட்டாலோ, அல்லது குழந்தையின் உயிருக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாமல் இருக்க அதை சீக்கிரமாகவே கண்டு பிடிச்சு சிசேரியன் செய்ய முனைவோம். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், ஆஸ்பிட்டல் வந்ததும் ஆபரேஷன் பண்ணிடறாங்கன்னு எங்களை தவறாக நினைத்து பயந்து மருத்துவமனை வர யோசிக்கிறாங்க. எனவே மக்களிடம் ஆபரேஷன் பற்றி சரியான புரிதல் வேண்டும்.
கேள்வி: வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது பற்றி?
பதில்: முறையான பயிற்சி இல்லாமல், போதிய அறிவு இல்லாமல் இதை கண்டிப்பாக செய்யக்கூடாது. வீட்டிலேயே பிரசவம் ஆன அந்த நொடியுடன் பிரச்சனை முடிவதில்லை. பிரசவித்த பிறகு அந்த குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். குறிப்பாக பிளாசண்டா எனப்படும் நஞ்சுக்கொடியை முழுமையாக அகற்றினால்தான் நச்சுக்கள் வெளியேறும். அவ்வாறு அகற்றும்போது நஞ்சுக்கொடி பாதி உள்ளேயே மாட்டிக்கொண்டால் அதனால் தாய்க்கு உதிரப்போக்கு ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாகிவிடும்.
கேள்வி: அப்போ என்ன சொல்ல வர்றீங்க? வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது தவறு என்கிறீர்களா? அந்த காலத்தில் எல்லாமே சுகப்பிரசவம்தானே? அவர்கள் எல்லாம் ஆரோக்கியமாக இல்லையா என்ன?
பதில்: அந்த காலத்தில் வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கு முறைப்படி மருத்துவச்சிகள் இருந்தார்கள். அவர்கள் பிரசவம் பார்ப்பதற்கென்றே பல வருடங்கள் பயிற்சிகளை எடுத்தவர்கள். அந்த தாயின் கர்ப்ப காலத்திலிருந்து, குழந்தை வயிற்றில் வளருவது, பிரசவம் பார்த்து முடிப்பதுவரை அனைத்திலும் மருத்துவச்சிகள் கை தேர்ந்திருந்தார்கள். முறையான பயிற்சியும், பிரசவம் குறித்த அறிவும் இருந்ததால்தான் மருத்துவச்சிகளால் சுகபிரசவம் பார்க்க முடிந்தது. எனவே அறிவற்றவர்கள், பயிற்சி அற்றவர்கள் பிரசவம் பார்ப்பது என்பது அந்த காலத்திலும் கிடையாது, இந்த காலத்திலும் கிடையாது.
கேள்வி: பிரசவத்தை பொறுத்தவரை தமிழகத்தின் அரசு மருத்துவமனைகள் எப்படி செயல்படுகின்றன?
இப்போது 24 மணி நேரமும் பிரசவத்தை பார்ப்பதற்கென்ற பிரிவுகள் நிறைய மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளன. ரத்த வங்கிகளும் அனைத்து மருத்துவமனைகளிலும் அதிகமாக உள்ளன. இதை தவிர பிரசவத்திற்கான மருத்துவ வசதிகளும் நிறைய வந்துள்ளன. பிரசவ வலி வந்தவுடனே ஆம்புலன்ஸில் கர்ப்பிணியை ஏற்றி வரக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்த கேஸை டாக்டர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ, பிரசவ கேஸ் என்றால் அதற்குதான் முன்னுரிமை வழங்கி பார்க்கிறோம். எனவே பிரசவத்தை பொறுத்தவரை மருத்துவமனைகள் சிறப்பாகத்தான் செயல்பட்டு வருகின்றன.
பதில்: வீட்டிலேயே பிரசவம் பார்க்கக் கூடாது என்கிறீர்கள், அப்படித்தானே?
கண்டிப்பாக. வீட்டில் பிரசவம் பார்க்கும்போது, தலை வெளியே வரும் சமயத்தில் குழந்தையின் மூளைக்கு ரத்த ஓட்டம் சிறிதளவு குறைந்தாலும் அது பின்னாளில் அந்த குழந்தையை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா? அந்த நேரத்தில் குழந்தை வெளியே வந்ததும் சுகப்பிரசவம் என்று எடுத்து கொள்ளக்கூடாது. குழந்தை வளரும்போதுதான் அந்த விளைவுகள் தெரிய ஆரம்பிக்கும். அதனால் வீட்டிலேயே பிரசவம் ஆகி குழந்தை பிறந்து நன்றாக இருக்கிறது என்பதை கண்ணால் பார்ப்பதை வைத்து கணிக்க முடியாது. ஒரு வருடமாவது அந்த குழந்தையின் வளர்ச்சியை மருத்துவர்கள் கண்கூடாக பார்க்க வேண்டும். அந்த ஒரு வருடத்தில் அந்த குழந்தைக்கு தேவையான சிகிச்சை முறைகளை பார்க்க வேண்டியுள்ளது. இதை வீட்டிலுள்ளவர்களால் செய்ய முடியாது. எனவே வீட்டில் பிரசவம் பார்க்கும் முறையை கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளவே முடியாது. அது முற்றிலும் தவறானது. மருத்துவமனையை நாடி வருவதே தாய்க்கும், சேய்க்கும் என்றுமே ஆரோக்கியமானது, பாதுகாப்பானதும்கூட!"