நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்கு பிரிவு மீண்டும் தொடக்கம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதை தொடர்ந்து அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் டெங்கு பிரிவு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பரவியது. டெங்கு காய்ச்சலுக்கு 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அப்போது நெல்லை அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டது.

பின்னர் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்ததால் சிறப்பு வார்டு மூடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக நெல்லை மாவட்டத்தில் மீண்டும் டெங்கு தலை தூக்கி வருகிறது. பல கிராமங்களில் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளது. குறிப்பாக முக்கூடல் தாளாளர் குளத்தில் டெங்கு காய்ச்சல் பாதித்து 3 சிறுவர்கள் பலியாகினர். இதனால் நெல்லை அரசு மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் மீண்டும் டெங்கு சிகிச்சை பிரிவு செயல்படத் தொடங்கியுள்ளது. தற்போது டெங்கு சிறப்பு வார்டில் 9 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மரியபவுசி, அபினயா ஆகிய இரு குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோல் பெரியவர்கள் சிகிச்சை பிரிவில் 6 பேர் காயச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் கூறுகையில்,
காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்கப்படுகிறது. பலர் தேறி வருகின்றனர். இதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்துவோம் என்றார்.












Click it and Unblock the Notifications