மருத்துவமனையில் உயிருடன் இருந்த வரை ஜெயலலிதாவை பார்க்கவில்லை - ஓ.பன்னீர்செல்வம்!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிரோடு இருந்த வரை அவரை தான் பார்க்கவே இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரோடு இருந்த வரை ஒரு முறை கூட தான் பார்க்கவில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நிதித்துறை கருவூலம் மற்றும் கணக்குத்துறை, உள்ளாட்சி நிதி தணிக்கைத் துறை, கூட்டுறவு தணிக்கைத் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஊதியதாரர்களுக்கு அடையாள அட்டை மற்றும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது : பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிற்கு எதிராக செயல்பட முடியாது என்று கூறி இருந்தார், இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் முரளிதரராவ் கூறி இருப்பது அவருடைய சொந்த கருத்து.
அரசு சரியான நடவடிக்கை
காவிரி விவகாரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்து வருகிறது. மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு சில விளக்கங்களை கேட்டுள்ளது, காவிரி நடுவர் மன்ற இறுதிஆணையின்படி சட்டப்பூர்வ அமைப்பான காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவை அமைப்பதற்கான ஸ்கீமை தெரியப்படுத்துங்கள் என்று உச்சநீதிமன்றம் கேட்டிருக்கிறது.
விசாரணைக்கு உத்தரவு
பொறுப்பான அரசாங்கம் இதனை செய்து வருகிறது, ஆனால் தமிழகத்தில் தேவையற்ற ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. இதனை மக்கள் விரும்பவில்லை. பேராசிரியை நிர்மலா தேவி பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவில் உண்மை நிலை தெரியவரும்.
ஜெயலலிதாவை பார்க்கவில்லை
நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கின்ற நேரத்தில் அவரை நான் பார்க்கவில்லை. அவர் உயிரோடு இருக்கும் வரை நான் பார்க்கவில்லை, பார்க்கவில்லை, பார்க்கவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஓ.பிஎஸ் பார்த்ததாக சொன்ன ராமமோகன ராவ்
ஜெயலலிதா தலைமையில் 2016 செப்டம்பர் மாதம் அப்பலோ மருத்துவமனையில் நடைபெற்ற காவிரி விவகாரம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றார் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் கூறி இருந்தார். இந்நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருடன் இருந்த வரை பார்க்கவே இல்லை என்று ஆணித்தரமாக கூறியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.