ஆக்கிரமிப்பாளர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் சாமியிடம் புகார் கொடுத்த சேலம் மக்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் சிவனடியார்கள் அமைப்பினர் சாமியிடம் புகார் கொடுத்தனர்.
சேலம் : ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக்கோரி சேலம் கோட்டை மாரியம்மன் சாமியிடம் பக்தர்கள் மனு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக சிவனடியார்கள் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பிலான பல்வேறு கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், அபகரிப்பு செய்யப்பட்டும் உள்ளன. இதை மீட்கக்கோரி அறநிலையத்துறையிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்கு மாறாக அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக செயல்பட்டு வருகிறார்கள்.
அயோத்தியாபட்டணம் ராமர் கோவில், சிக்கம்பட்டி மாரியம்மன் கோவில், சேலம் நரசோதிப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், உலிபுரம் கம்ப பெருமாள் கோவில், பூலாம்பட்டி மதுர காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில் சொத்துக்கள் இன்னும் மீட்கப்படாமல் உள்ளது. அங்குள்ள அசையும் சொத்து, அசையாத சொத்துக்கள் களவாடப்படுவது பற்றி எடுத்துக்கூறியும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுகிறார்கள்.
உண்டியல் திறப்பிலும் ஊழல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இவற்றையெல்லாம் கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். இதனால் தான் இறுதிக்கட்டமாக கோட்டை மாரியம்மனிடம் எங்களது மனுவை அளித்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதலை வைத்துள்ளோம்.
இதற்கு பின்பும் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு சொத்துக்களை அதிகாரிகள் மீட்க நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விரைவில் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு சேலம் கோட்டை மாரியம்மனிடம் 'கோயில் நிலங்களை மீட்க வேண்டும்' என மனு அளித்தோம்.
இவ்வாறு சிவனடியார்கள் கூறினர்.