செய்தீர்களா? நீங்கள் செய்தீர்களா? உங்களை மக்கள் கேட்பார்களே!!
சென்னை: மனிதனுக்கு மறதி என்று ஒன்று இருப்பதினால்தான் அரசியல்வாதிகள் அதை பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாக்குறுதிகளை அள்ளிவிடுவோம். அதை பாதி நிறைவேற்றினாலே போதும் அதற்குள் அடுத்த தேர்தல் வந்து விடும் மீண்டும் புதிய வாக்குறுதிகளை கொடுத்தல் போச்சு என்கிற ரீதியில் காலத்தை ஓட்டி வருகின்றனர்.
2011ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதல் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதோடு, அதற்கு மேலும் தமிழக மக்களுக்குப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம் என்று கடந்த வாரம் சட்டசபையில் ஜெயலலிதா சொன்னது இது. அ.தி.மு.க தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக அறிக்கை வாசித்தார் ஜெயலலிதா. நிஜமாவா? அப்படி ஜெயலலிதா நிறைவேற்றிய திட்டங்கள் எவை? எவை? காற்றோடு போனவை எவை? எவை?. என்று ஆராய்ந்து பார்த்தால் பாதி கூட நிறைவேற்றவில்லை ஜெயலலிதா அரசு.
இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மக்களுக்கு அதிமுக அளித்த வாக்குறுதிகளை சற்றே நினைவூட்டுகிறோம்
தமிழகத்தை ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் நடைபோட வைக்கவும், தமிழர்களின் மொழி, இன கலாச்சார உணர்வுகளை மீட்டெடுத்து, எதற்கும்
கை ஏந்தும் ஏழ்மை நிலையை மாற்றி, தன்மான மிக்க தமிழினத்தை மீண்டும் உருவாக்கும் சுய மரியாதையை மீட்டெடுத்து, எதிர்கால தமிழ்
இளைஞர்கள், இளம் பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்க, ஏற்ற வழியை உருவாக்கவும்; கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர்,
அடிப்படை கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து - இழந்த பெருமையை மீட்டெடுத்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்வது தான் அதிமுகத்தின் லட்சியம்.
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட வேலை வாய்ப்பை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவோம். ஒவ்வொரு தமிழனும் எதற்கும் ஏங்கும் நிலையை மாற்றி, சுயமரியாதையுடன் வாழ வழிவகை செய்யப்பட்டு, "நாடென்ன செய்தது நமக்கு?" என்ற நிலை மாறி, "நான் நாட்டிற்கு என்ன செய்ய வேண்டும்?" என்று சொல்லும் நிலைக்கு மக்களையும், இளைஞர்களையும் தயார்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிமுறைகள் வகுக்கப்படும் என்று ஆரம்பிக்கிறது அதிமுகவின் தேர்தல் அறிக்கை
- இரண்டாம் விவசாய புரட்சித் திட்டம்
- கரும்பு உற்பத்தி புரட்சித் திட்டம்
- நுண்ணிய வேளாண்மை புரட்சித் திட்டம்
- சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம்
- அனைவருக்கும் தரமான மருத்துவம்
- நவீன பசுமை வீடு கட்டமைப்பு
- இருண்ட தமிழகம் ஒளி பெற தடையில்லா மின்சாரம்
- இயற்கை எரிவாயு மின்சாரம்
- சிறப்பு உணவுப் பூங்கா :
- நவீன மக்கள் சந்தைகள் மற்றும் குளிர்பதன கிடங்குகள்:
- பருத்தி உற்பத்தியை இரண்டு மடங்காக்க நடவடிக்கை:
- ஆடை அலங்கார பொருட்களுக்கான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் :
- கைத்தறித் துறை மறுசீரமைப்பு:
- ஆடை அலங்கார பூங்காக்கள் உருவாக்கப்படும்.
- மீண்டும் ஒரு வெண்மைப் புரட்சிக்கு தமிழகம் தயார் :
- ஏழை மக்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உடனடி நடவடிக்கை:
- நகர்ப்புற வசதிகள் கிராமப்புறங்களுக்குக் கிடைக்க திட்டம்:
- பள்ளிக் கல்வி சீரமைப்பு:
- தமிழகத்தில் உயர் கல்வியை உயிர்ப்பிக்க 12 அம்ச திட்டம்:
- மாணவர்களின் தனித் திறமை மற்றும் அறிவுசார் வளர்ச்சிக் கழகம்:
- மீன்பிடி தொழிலை நவீனப்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிப்பு: மீனவர் பாதுகாப்பு படை அமைக்கப்படும்.
- கச்சத் தீவை மீட்டெடுத்து தமிழக மீனவர் நலன் காக்கப்பட தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
- தாழ்த்தப்பட்ட மக்கள், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு சிறப்புத் திட்டம்:
- தாய்மார்களுக்கு ஒரு காற்றாடி, ஒரு மிக்ஸி, ஒரு கிரைண்டர் ஆகிய மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
- குழந்தையை பேணி பாதுகாக்க பணிபுரியும் தாய்மார்களுக்கு மகப்பேறு காலச் சலுகையாக 6 மாத விடுமுறையும், 12,000/- ரூபாய் நிதி உதவி
- 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ்
- இலங்கை தமிழ் அகதிகளுக்கு சிறப்பு மறுவாழ்வு திட்டம், தரமான இருப்பிடம், தண்ணீர் மற்றும் சுற்றுப்புற சுகாதார மேம்பாடு போன்றவை வழங்கப்படும்.
- அகதிகளாக வந்தவர்கள் தமிழகத்திலே கௌரவமாக வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
என்பன உள்ளிட்ட 52 வாக்குறுதிகளை அறிவித்தது அதிமுக நடைமுறையில் உள்ள மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்றார்கள். 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருட்கள், இலவச கலர் டி.வி., காஸ் ஸ்டவ், உழவர் சந்தைகள், வரும் முன் காப்போம் திட்டம், சமத்துவபுரங்கள் ஊத்தி மூடப்பட்டு விட்டது.
நிறைவேறாத வாக்குறுதிகள்
- சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் திட்டம்
- சென்னை டு கன்னியாகுமரி கடலோர சாலைத் திட்டம்.
- தென் தமிழகத்தில் ‘ஏரோ பார்க்'.
- ஆன்லைன் வர்த்தகம் தடுக்கப்படும்.
- 10 ஆடை அலங்காரப் பூங்காக்கள்.
- திருப்பூர் சாயக் கழிவுகளைச் சுத்திகரிக்க விஞ்ஞானக் கழிவு அகற்றும் நிலையம்.
- 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசு பேருந்துகளில் பக்கத்து நகரங்கள், கிராமங்களுக்கு சென்று வர இலவச பஸ் பாஸ்
- மின்னணு ஆளுமையின் கீழ் அனைத்துக் காவல் நிலையங்கள்.
- விவசாயிகளைப் பங்குதாரர்களாகக் கொண்ட 6 ஆடை அலங்கார சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.
- பள்ளிகளில் தாய்மொழியோடு பிறமொழிகள் பயில சிறப்புப் பயிற்சிகள்.
- நீதிமன்றங்களில் தமிழ்மொழி.
- தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
- வனவிலங்குகள் குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுவதைத் தடுக்க நடவடிக்கை.
- தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டு மடங்காக்குவோம்.
- மொபைல் மின்னணு ஆளுமைத் திட்டம்.
இவை நிறைவேற்றிய வாக்குறுதிகள்
- ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்கள், சொத்துக்கள் மீட்பு.
- பட்டதாரி பெண்களுக்கு 50 ஆயிரம், 4 கிராம் தங்கம் திருமண உதவித் திட்டம்.
- அரசிதழில் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு.
- விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி.
- சூரிய சக்தி மின்சார பயன்பாட்டோடு பசுமை வீடுகள்.
- ரேஷனில் 20 கிலோ இலவச அரிசி.
- மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்.
- வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு 4 ஆடுகள்.
- மாணவர்களின் புத்தகச் சுமை குறைக்கப்படும்.
- மாணவர்களுக்கு இலவச சீருடைகள், காலணிகள்.
- மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.
- இலவச கறவை மாடுகள்.
- இதில் இலவச பொருட்கள் அனைத்தும் ஓட்டை உடைசலாக உள்ளது எனவும், ஆடு மாடுகள் நோஞ்சான்களாக உள்ளது எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு அறிவித்த வெள்ளநிவாரணம் இன்னமும் சரியாக மக்களுக்கு சென்று சேரவில்லை. இந்த ஆண்டு தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வந்தால் செய்வீர்களா? செய்வீர்களா? என்று முதல்வர் கேட்பதற்கு பதிலாக செய்தீர்களா? செய்தீர்களா? என்று மக்கள் கேட்டாலும் ஆச்சரியமில்லை.