கருத்து கணிப்பு பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை - வைகோ
தூத்துக்குடி: தற்போது வெளியாகியுள்ள கருத்து கணிப்பு பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. கூட்டணி குறித்து அரசியல் கட்சிகள் தெளிவான முடிவுகளை அறிவிக்காத நிலையில் தமிழக அரசியல் களம் படு பரபரப்பாக உள்ளது. இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நலக்கூட்டணி ஆகிய கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வகம் கருத்து கணிப்பு நடத்தியது. அந்த கருத்து கணிப்பின் படி சட்டசபை தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு 5.4 சதவிகித மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலக்கூட்டணியில் 4 கட்சிகள் இப்போது உள்ளன. இந்த கூட்டணியை வலுப்படுத்த தேமுதிகவிற்கும், தமாகாவின் வாசனுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் வாசனும், விஜயகாந்தும் இதுவரை எந்த பதிலும் கூறவில்லை. இந்த நிலையில் 5.4% மக்களின் ஆதரவு மட்டுமே மக்கள் நலக்கூட்டணிக்கு கிடைத்துள்ளது.
இதையடுத்து இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வைகோ, தமிழ்நாட்டில் தற்போது புதிய பரிமாணம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாறுதல் வேண்டும் என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் கருத்துகணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நலக்கூட்டணியை 65 சதவீத மக்கள் விரும்புகிறார்கள். எனவே இந்த கருத்து கணிப்பு சாத்தியமில்லை என்றார். மேலும் கருத்து கணிப்பு பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை என்றும் வைகோ தெரிவித்தார்.