மகனுக்காக பிரேமலதாவிடம் தூது போன சரஸ்வதி ராமதாஸ்?: இணைந்த கைகளின் பின்னணி
சென்னை: பாஜக கூட்டணியில் தேமுதிக உடன் கை கோர்க்க பாமக தரப்பில் பல்வேறு சங்கடங்கள் எழுந்தன. உச்சக்கட்டமாக டாக்டர் ராமதாஸுக்கும், அன்புமணி ராமதாஸுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளும், இருவரிடையையான போராட்டத்தில் ராமதாஸின் மனைவி சரஸ்வதி நடத்திய சமாதானப் படலமும்தான் ஹைலைட் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பரம வைரிகளாக இருந்த பாமகவும், தேமுதிகவும் இன்று ஒரே அணியில் இணைந்துள்ளன. சிங்கம், சிறுநரி என்று பேசிய ராமதாஸ் இன்று பாஜக அணியில் இணையும் முன்பு பல்வேறு சம்பவங்கள் குடும்பத்திற்குள் அரங்கேறியுள்ளன.
தர்மபுரியில் கொதிப்பு
தர்மபுரியில் அன்புமணியை அறிமுகப்படுத்திய ராமதாஸ், சிங்கங்கள், சிறுநரிகளிடம் பிச்சையெடுக்க வேண்டுமா? என்று பேசினார். இந்த பேச்சு கூட்டணித் தலைவர்களை விட அன்புமணியைத்தான் அதிகம் கொதிப்படைய வைத்ததாம்.
அன்புமணியின் 5 கன்டிஷன்
அதே கோபத்தோடு சென்னை வந்த அன்புமணி, தனது தாயாரிடம் கொட்டி தீர்த்து விட்டாராம். தந்தைக்கு நெருக்கடி தரும் வகையில் 5 கன்டிஷன்களை முன்வைத்தாராம் அன்புமணி. போட்டியில் இருந்து விலகுவது, இளைஞரணியில் இருந்து ராஜினாமா செய்வது முக்கிய அம்சங்கள். தருமபுரியில் குருவை போட்டியிடச் செய்யுங்கள், இரண்டு மாதங்களுக்கு வெளிநாடு போகிறேன். வெளிநாட்டிலிருந்து வந்தாலும் அரசியலில் ஈடுபட மாட்டேன் என்றும் கூறவே ஆடிப்போய்விட்டார் சரஸ்வதி.
கண்ணீர் விட்ட சரஸ்வதி
பாஜக கூட்டணிக்குள் பாமக வராவிட்டால், 5 கண்டிஷன்களில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அடுத்த அஸ்திரத்தை எறியவே, கணவரிடம் கண்ணீர் விட்டு கரைத்தாராம் சரஸ்வதி.
பிரேமலதாவிடம் சமாதானம்
இதற்கு முன்னதாக சிங்கம், சிறுநரி பேச்சுக்கு வருத்தமடைந்துள்ள தேமுதிகவினரை சமாதானம் செய்ய வேண்டும் என்று அன்புமணியை பாஜக தலைவர்கள் வற்புறுத்தவே, மகனுக்காக பிரேமலதாவிடம் பேசப்போனாராம் சரஸ்வரி.
அன்பு பாராட்டிய பிரேமலதா
சரஸ்வதி ராமதாஸ் எதிர்பார்த்து போனதற்கு மாறாக அன்பு பாராட்டி பேசினாராம் பிரேமலதா. இது இரு தரப்பினரையுமே மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாம்.
அன்று கணவருக்காக…
இதே சரஸ்வதி கடந்த 1995ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமதாஸை காப்பாற்ற ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதினார். இன்று மகனின் அரசியல் வாழ்விற்காக பிரேமலதாவிடம் சமாதானம் பேசியுள்ளார்.
ஒருவழியாக சேர்ந்த கூட்டணி
சேருமா, சேராதா என்று அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாமக ஒருவழியாக கூட்டணியில் சேர்ந்துவிட்டது. இதற்குக் காரணம் சரஸ்வதி ராமதாசின் முயற்சிகள்தான் என்கின்றனர். விஜயகாந்திற்கு அன்புமணி சால்வை போர்த்தியதும், ஒரே மேடையில் ஏறி கூட்டணியை அறிவித்ததும் நேற்றைய ஹைலைட். இதேபோல விஜயகாந்துடன் ஒரே மேடையில் ஏறி ராமதாஸ் வாக்கு கேட்பாரா? என்பதை காலம்தான் தீர்மானிக்கும்.