டிடிவி தினகரனை சந்தித்தார் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி - ஆதரவு 20 ஆக உயர்வு
அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்
சென்னை: சன்ட் நகர் வீட்டில் டி.டி.வி.தினகரனை சந்தித்து அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி ஆதரவு தெரிவித்தார். டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு பிளவுபட்டிருந்த அதிமுகவின் இரண்டு அணிகளும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இணைந்தது. உடனே துணைமுதல்வராக நியமிக்கப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம்.
இந்த இணைப்பும், ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுக்கும் முக்கியத்துவமும் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு பிடிக்கவில்லை.
இதையடுத்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று கூறி ஆளுநரிடம் மனு அளித்தனர்.
தினகரனுக்கு ஆதரவாக அரவக்குறிச்சி செந்தில் பாலாஜி , பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன், தஞ்சாவூர் ரெங்கசாமி பூந்தமல்லி ஏழுமலை, அரூர் முருகன் , மானாமதுரை கென்னடி மாரியப்பன், நிலக்கோட்டை தங்கத்துரை, பரமக்குடி முத்தையா, சோளிங்கர் பார்த்திபன், குடியாத்தம் ஜெயந்தி பத்மநாபன், விளாத்திக்குளம் உமா மகேஸ்வரி, கம்பம் எஸ்.டி.கே. ஜக்கையன் , திருப்போரூர் கோதண்டபாணி , பெரியகுளம் கதிர்காமு, சாத்தூர் சுப்பிரமணியன், ஓட்டப்பிடாரம் சுந்தரராஜ் , ஆம்பூர் பாலசுப்பிரமணியன், ஆண்டிபட்டி தங்கத்தமிழ் செல்வன் ஆகிய 18 பேர் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். டி.டி.வி. தினகரனின் தீவிர ஆதரவு எம்.எல்.ஏ.வான வெற்றிவேல் மட்டும் புதுச்சேரிக்கு செல்லவில்லை.
இதனிடையே அரசு கொறடா ராஜேந்திரன், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை கட்சித்தாவல் சட்ட அடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை செய்து உள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து சபாநாயகர் தனபால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் விடுத்து உள்ளார். அரசு கொறடாவின் பரிந்துரையை ஏற்று 19 எம்எல்ஏக்களுக்கும் 7 நாட்களுக்குள் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் விடுத்து உள்ளார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை அடையாறில் டிடிவி தினகரனுடன் அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி சந்தித்து பேசினார். எம்எல்ஏ ரத்தினசபாபதி, தினகரனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து உள்ளார். இதனையடுத்து தினகரனுக்கு ஆதரவளிக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்து உள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் எந்த அணியிலும் நான் இல்லை. அதிமுகவின் 133 எம்எல்ஏக்களில் நானும் ஒருவன். கட்சி, ஆட்சியை இருவருமே இணைந்து வழிநடத்தும் நிலை உருவாகும் என்று கூறினார்.
எடப்பாடி பழனிச்சாமி அணியில் இருந்த ரத்தினசபாபதி திடீரென அணி மாறியதற்குக் காரணம் பரணி கார்த்திக்கேயன்தான் என்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த பி.கே. வைரமுத்துவை பதவியில் இருந்து டி.டி.வி.தினகரன் நீக்கிவிட்டு மாவட்ட செயலாளராக முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பரணி கார்த்திகேயனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர் அறந்தாங்கி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரத்தின சபாபதியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.