அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்- தினகரன் தரப்பு
எடப்பாடி அரசுக்கு எதிராக கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்கிறது தினகரன் தரப்பு.
சென்னை: முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது கொறடா உத்தரவை மீறி வாக்களித்த தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள்தான் உண்மையில் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி செய்யப்பட வேண்டும் என்பது தினகரன் தரப்பு வாதம்.
முதல்வர் பதவியை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர்; அதனால் தம்மை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் 11 எம்.எல்.ஏக்களுடன் சென்று ஓபிஎஸ் மனு கொடுத்து காத்திருந்தார். அதேநேரத்தில் சசிகலா தம்மை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என 122 எம்.எல்.ஏக்களுடன் ஆளுநரிடம் மனு கொடுத்தார்.
ஆனால் சசிகலா மீதான வழக்கின் தீர்ப்புக்காக காத்திருந்தார். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கான தண்டனை உறுதி செய்யப்பட அவரும் சிறைக்கு சென்றார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக தேர்ந்தெடுத்தனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். எடப்பாடி பழனிச்சாமியும் சட்டசபையில் கடந்த பிப்ரவரி மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.
கொறடா உத்தரவை மீறி வாக்களிப்பு
அப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக அதிமுகவின் கொறடா உத்தரவை மீறி ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
11 பேர் தகுதி நீக்கத்துக்கு தகுதி
அப்போதே கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வலியுறுத்தி சபாநாயகர் தனபாலிடம் எடப்பாடி தரப்பு கடிதம் கொடுத்தது. கட்சி தாவல் தடை சட்டவிதிகளின் படியும் நீதிமன்ற தீர்ப்புகளின்படியும் இந்த நேரம் 11 எம்.எல்.ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது
ஆனால் அதற்கு மாறாக 'முதல்வர் மீது நம்பிக்கை இல்லை' என கடிதம் கொடுத்த ஒரே காரணத்தால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். இது கர்நாடகாவின் எதியூரப்பா வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரானது என்கிறது தினகரன் தரப்பு. தற்போது கட்சி கொறடா உத்தரவை மீறி வாக்களித்த ஓபிஎஸ் உட்பட 11 பேர் மீதான நடவடிக்கையை தாங்கள் வலியுறுத்துவோம்; நீதிமன்றத்திலும் முறையிடுவோம் என்கிறது தினகரன் தரப்பு.