தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்திப்பதை அரசியலாக்காதீர்கள்... அமைச்சர் ஜெயக்குமார்
தினகரனை எம்எல்ஏ-க்கள் சந்தித்து வருவதை அரசியலாக்க வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை: தினகரனை அதிமுக எம்எல்ஏ-க்கள் சந்தித்து வருவதை அரசியலாக்காதீர்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் ஜாமீனில் வெளியே வந்தார். இதைத் தொடர்ந்து அவரது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அமைச்சர்கள் ஜெயகுமார், வீரமணி, தங்கமணி, வேலுமணி ஆகிய 4 அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் அமைச்சரவையில் மாற்றம் செய்து தங்கதமிழ்ச் செல்வன், செந்தில் பாலாஜி ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
தினகரனுக்கு ஆதரவு எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை பெருகி வருவதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படலாம் என தெரிகிறது. இதைத் தொடர்ந்து 8 மாவட்ட எம்எல்ஏ-க்கள் முதல்வர் பழனிச்சாமியை நேற்று தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.
தொகுதி நிலவரம் குறித்து எம்எல்ஏ-க்கள் முதல்வரிடம் ஆலோசனை நடத்தி வந்த நிலையில் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் ஜெயகுமாரின் பதவி பறிபோக வாய்ப்பு என்று தங்கதமிழ்செல்வன் சொன்னதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். அதை மறந்து விடுங்கள்.
அனைத்து எம்எல்ஏ-க்களையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து வரும் நிலையில் டிடிவி தினகரனை சில எம்எல்ஏ-க்கள் சந்திப்பதை அரசியலாக்கக் கூடாது. தமிழகத்தில் நிலையான ஆட்சி நடைபெற்று வருகிறது. சசிகலா சிறையில் உள்ளதாலும், தினகரனையும் ஒதுக்கி வைத்ததாலும் கட்சியை வழிநடத்துவது குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. ஜெயலலிதாவின் அரசுக்கு எந்த வித அச்சுறுத்தலும், ஆபத்தும் ஏற்படவில்லை. எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றார்.