புரோக்கர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கே லஞ்சம்.. தினகரன் மீது கடும் நடவடிக்கை தேவை - மாஃபா
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்களிடம் சசிகலா அணியினர் ரூ. 60 கோடி பேரம் பேசியதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: இரட்டை இலை யாருக்கு என்ற மல்லுக்கட்டு நடந்து வரும் நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற ரூ. 60 கோடி வரை சசிகலா அணியினர் பேரம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லஞ்சம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
எம்ஜிஆர் உருவாக்கி,ஜெயலலிதா கட்டிக்காத்த அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் கைப்பற்ற ஓபிஎஸ் அணியும், சசிகலா அணியும் முட்டி மோதி வருகின்றன. கட்சி, சின்னம் தொடர்பான விசாரணை இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெ உள்ளது. இந்த நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற ரூ. 60 கோடி வரை பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இரட்டை இலை சின்னம் யாருக்குக் கிடைக்கிறதோ அவர்தான் உண்மையான அதிமுக என்பது உறுதியாகிவிடும். எனவே முடக்கப்பட்டுள்ள சின்னத்தையும், கட்சியையும் கைப்பற்ற இரு அணிகளுமே பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றனர்.
சின்னம் பெற லஞ்சம்
இரட்டை இலைச்சின்னத்தை பெற்றுத் தருமாறுக்கூறி டிடிவி.தினகரன் டெல்லியைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற தொழிலதிபரிடம் ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். தெற்கு டெல்லி ஹோட்டலில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிய சுகேஷ் சந்திராவை பிடித்து போலீசார் விசாரித்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
ரூ. 60 கோடி பேரம்
இரட்டை இலைச்சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு ரூ. 60 கோடி பேரம் பேசியதாக சுகேஷ் சந்திரா தனது வாக்கு மூலத்தில் கூறியுள்ளார். டிடிவி தினகரன் பெயரையும் அவர் கூறியுள்ளது திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
மாஃபா பாண்டியராஜன்
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தரப்பட்டது தொடர்பாக ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.
சுகேஷ் சந்திரா என்பவர் இடைத்தரகர் என குற்றம் சாட்டியுள்ள மாஃபா பாண்டியராஜன், லஞ்சம் கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications