ஸ்டாலினை முதல்வராக்க ஓபிஎஸ் முயற்சி ... அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வமும், மு.க.ஸ்டாலினும் உள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
சேலம்: திமுக செயல் தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருகிறார் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் வனத்துறை அதிகாரிகளுக்கான ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்களின் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வமும், மு.க.ஸ்டாலினும் உள்ளனர். ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வைத்த கோரிக்கைகளை நாங்கள் நிறைவேற்றிவிட்டோம்.
ஆனால், ஏன் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என எங்களுக்குத் தெரியிவில்லை. மு.க.ஸ்டாலினை முதல்வராக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி செய்து வருகிறார்.
122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எப்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனாரோ அதேபோல் விரைவில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி மீட்பார்.
தமிழகத்தில் விலைவாசி உயரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் உள்ளது.
தற்போது 38 எம்.பிக்களும், 48 மாவட்ட செயலாளர்களும், 3 ஆயிரம் செயற்குழு உறுப்பினர்கள் எங்களிடம் உள்ளனர். நமக்கு எதிராக உள்ளவர்கள் இரட்டை இலை சின்னத்தை திட்டமிட்டு முடக்கி உள்ளனர். 142 ஆண்டுகளாக இல்லாத வறட்சி இப்போது ஏற்பட்டுள்ளதால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தேவைப்படும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.