நியூயார்க்கின் மேயராக கௌரவிக்கப்பட்ட சிவாஜியின் சிலை அகற்றப்பட்டது நம் ஊரில்... இயக்குநர் சேரன்
இந்தியாவில் இருந்து நியூயார்க்கின் மேயராக கௌரவிக்கப்பட்ட ஒரே இந்தியரான சிவாஜி கணேசனின் சிலை நம் ஊரில் அகற்றப்பட்டது என்று இயக்குநர் சேரன் வேதனை தெரிவித்தார்.
சென்னை: சென்னை மெரினா கடற்கரை சாலையில் இருந்ந்து சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது குறித்து இயக்குநர் சேரன் டுவிட்டரில் வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை சென்னை மெரினா காமராஜர் சாலை-ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையால் போக்குவரத்து பாதிக்கப்படுவதாகவும், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கின் இறுதியில், சிவாஜி கணேசன் சிலையை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு தமிழக அரசு போதிய அவகாசம் வழங்குமாறும் கேட்டுக் கொண்டது. சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.
மணிமண்டபம்
அந்த பணி முடிவடையாத காரணத்தால் இதுநாள் வரை சிவாஜி கணேசன் சிலை அகற்றப்படவில்லை. சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படுவதால் அங்கு சிலையை வைக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அரசு கூறியதை ஏற்று நீதிமன்றம் அவகாசம் அளித்தது.
இரவோடு இரவாக அகற்றம்
இந்நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிவாஜி சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ராட்சத இயந்திரங்கள் மூலம் சிலையை வெட்டி எடுத்து லாரியில் ஏற்றி மணிமண்டபம் கட்டப்படும் இடத்திற்கு கொண்டு சென்றனர்.
ரசிகர்கள் வேதனை
இதனால் திரையுலகினர், ரசிகர்கள், பொதுமக்கள் வருத்தம் அடைந்தனர். சிவாஜி சிலையை ஏற்கெனவே இருந்த இடத்தில் வைக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடைபெறும் என்று இயக்குநர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், சிவாஜி சிலை அகற்றம் குறித்து இயக்குநர் சேரன் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
|
நம் ஊரில் அகற்றப்பட்டது
அதில் இந்தியாவில் இருந்து நியூயார்க்கின் மேயராக கெளரவிக்கப்பட்ட ஒரே இந்தியர் சிவாஜிகணேசன் மட்டுமே. அவர்சிலைதான் நம்ஊரில் அகற்றப்பட்டது...நாம் தமிழர் என்று குறிப்பிட்டுள்ளார்.