வெளிச்சத்திற்கு வரும் சசிகலா தம்பி திவாகரன்... திருத்துறைப்பூண்டி கோவில் தேரோட்டத்தில் உற்சாகம்!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் உற்சாகமாக பங்கேற்று வடம் பிடித்தார்.
திருவாரூர்: அதிமுகவில் சசிகலாவும் இல்லை, தினகரனும் இல்லை என்பதால் சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீண்டும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளார்.
திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் தேரோட்டத்தில் உற்சாகமாக பங்கேற்று வடம் பிடித்து இழுத்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவன் பிறவி மருந்தீஸ்வரராக பெரிய நாயகி அம்மனுடன் அருள்பாலித்து வருகிறார். சிவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் தலமான இக்கோவில், பக்தர்களால் பரிகார நிவர்த்தி தலமாக வழிபடப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைதொடர்ந்து காலை 7 மணி அளவில் பிறவிமருந்தீஸ்வரர், பெரியநாயகிஅம்மனுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டம்
சசிகலாவின் சகோதரர் திவகாரன்தான் தேரோட்டத்தில் பிரதானமாக பங்கேற்று வடம் பிடித்து இழுத்தார். இதன் மூலம் ஆன்மீகத்தோடு அரசியல் பயணத்தையும் மீண்டும் தொடங்கப் போகிறாராம் திவாகரன்.
பாஸ் திவாகரன்
டெல்டா மாவட்டத்தில் பாஸ் என்ற அதிகாரத்தோடு வலம் வந்தவர் திவாகரன். டெல்டா மாவட்ட அதிமுகவை தன் முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
2011 சட்டமன்றத் தேர்தலில் இவர் சொல்லும் நபருக்கு சீட் வாங்கிக் கொடுத்து, வெற்றிபெற வைத்து அமைச்சர்களாக்கி அழகு பார்த்தார்.
விரட்டிய ஜெயலலிதா
சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா விரட்டிய போது கைது, சிறை, கோர்ட் என்று அலைந்தார் திவாகரன். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு சசிகலாவின் சொந்தங்கள் ஒட்டிக்கொள்ள மீண்டும் திவாகரன் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார். ஆனால் துவார பாலகர்களாய் இருந்து தடுத்து விட்டனர் தினகரனும், வெங்கடேசும்.
தினகரன் முட்டுக்கட்டை
அதிமுகவில் எந்த அதிகாரமும் கிடைக்காமல் பார்த்துக்கொண்டனர். திவாகரனை சசிகலாவிடம் கூட நெருங்க விடவில்லை. திவாகரன் மட்டுமல்ல அவரது மகன் ஜெயானந்த் கூட அதிமுகவிற்குள் தலைகாட்டி விடாதபடி பார்த்துக்கொண்டார் தினகரன்.
வெளிச்சத்துக்கு வந்த திவாகரன்
லஞ்ச வழக்கில் தினகரன் சிறைக்கு செல்ல, இப்போது கட்சியில் மீண்டும் ஆக்டிவ் ஆக இயங்கத் தொடங்கிவிட்டாராம் தினகரன். ஊர் திருவிழாவில் பங்கேற்று வருகிறார். அண்ணன் மீண்டும் அதிகாரத்துக்கு வந்துவிட்டார் என்பதற்கு உதாரணம் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். சசிகலா குடும்பத்தையே விலக்க வேண்டும் என்று ஓபிஎஸ் அணி கூறினாலும், கட்சியை கபளீகரம் செய்ய தினகரன், திவாகரன், விவேக், ஜெயானந்த் என வரிசை கட்டுகின்றனர்.