மன்னார்குடியில் திவாகரன் நடத்த இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு சசிகலா திடீர் தடை!
மன்னார்குடியில் திவாகரன் நடத்த இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சசிகலா விதித்த தடையால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை: மன்னார்குடியில் திவாகரன் நடத்த இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு சசிகலா திடீரென தடை விதித்தால் அந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவில் தினகரன் கை ஓங்கியது. இதை சசிகலாவின் தம்பி திவாகரன் தரப்பு ரசிக்கவில்லை.
ஜெயானந்த்
திவாகரனைப் பொறுத்தவரையில் மகன் ஜெயானந்துக்கு அதிமுகவில் மாநில பொறுப்பை எதிர்பார்த்தார். ஆனால் தினகரனோ கட்சியையும் ஆட்சியையும் தம் வசமே வைத்துக் கொள்ள முயற்சித்தார்.
எடப்பாடியும் திவாகரனும்
தினகரனும் சிறைக்குப் போன உடன் எடப்பாடியுடன் திவாகரன் கை கோர்த்துக் கொண்டார். எடப்பாடியும் திவாகரனும் இணைந்து தினகரனை ஒதுக்கி வைத்துவிட்டனர். தினகரன் அதிமுக அலுவலகத்துக்கு கூட செல்ல முடியாத நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது.
மன்னார்குடி கூட்டம்
இதனிடையே தினகரன் தமது ஆதரவாளர்களான நாஞ்சில் சம்பத், கர்நாடகா புகழேந்தி மூலம் மன்னார்குடியில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் போலீசார் அனுமதிக்கவும் இல்லை.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
இந்நிலையில் வரும் 15-ந் தேதியன்று மன்னார்குடியில் திவாகரன் தரப்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான போஸ்டர்களில் எடப்பாடி படம் இடம்பெற்றது. ஆனால் தினகரன் படம் இடம்பெறவில்லை.
தடை விதித்த சசிகலா
இதனிடையே திவாகரன் இந்த விழாவை நடத்த கூடாது என சசிகலா உத்தரவிட்டாராம். திவாகரனும் எடப்பாடியும் கைகோர்ப்பதை சசிகலா விரும்பவில்லையாம். இதனால்தான் இந்த நிகழ்ச்சிக்கு சசிகலா தடை விதித்துவிட்டாராம். திவாகரன் மகன் ஜெயானந்தும் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.