வீதிக்கு வந்த சசிகலா குடும்ப சண்டை... ஃபேஸ்புக்கில் மல்லுக்கட்டும் திவாகரன், இளவரசி மகன்கள்!
சென்னை: அதிமுகவில் சசிகலா குடும்பத்துக்கு குட்பை சொல்லிவிட்டதில் திவாகரன் தரப்புதான் உற்சாகத்தில் இருக்கிறது போல.. இது தொடர்பாக திவாகரன் மற்றும் இளவரசி மகன்கள் ஃபேஸ்புக்கில் மல்லுக்கட்டி வருகின்றனர்.
சசிகலா குடும்பம் இல்லாத அதிமுக என்ற முழக்கத்தை முன்வைத்து ஓபிஎஸ், எடப்பாடி கோஷ்டிகள் கை கோர்த்துவிட்டன. டிடிவி தினகரனும் அனைவருக்கும் நன்றி விடைபெறுகிறேன் என சொல்லி அதிமுகவை விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இன்று கைது?
தினகரனை இன்று நள்ளிரவே டெல்லி போலீஸ் திஹார் சிறைக்குத் தூக்கிச் செல்லும் நிலைதான் இருக்கிறது. இதனால்தான் ஒட்டுமொத்தமாக அமைச்சர்கள் அனைவருமே டிடிவி தினகரனை கை கழுவி ஒதுக்கி வைத்துவிட்டனர்.
திவாகரன் கோஷ்டி மகிழ்ச்சி
உண்மையில் தினகரனை ஒதுக்கி வைத்ததில் திவாகரன் தரப்புதான் ரொம்பவே மகிழ்ச்சியில் உள்ளது. திவாகரன் மகன் ஜெயானந்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஏகப்பட்ட மகிழ்ச்சி குரல்கள்... 'சொந்த குடும்பத்தையே ஒதுக்கி வைத்தால் இப்படித்தான்' என்றெல்லாம் கூட கமெண்ட்ஸ்.
விவேகமானது முடிவு
திவாகரன் மகன் ஜெயானந்தும் கூட, தாமதமான முடிவாக இருந்தாலும் விவேகமானதே என பாராட்டி பதிவிட்டுள்ளார். இதை ஆதரித்து ஏகப்பட்ட கமெண்டுகள் போடப்பட்டு வருகின்றன.
விவேக் கொந்தளிப்பு
இதில் இளவரசி மகன் விவேக்கும் ஒரு கமெண்ட் போட்டிருக்கிறார். அந்த கமெண்ட்டில் "நடப்பவை கழகத்துடைய நன்மைக்கானவை அல்ல, மாறாக, கழகம் சுக்குநூறாக ஆவதற்கான வாய்ப்பை இவை உருவாக்கும்" என காட்டமாக போட்டிருக்கிறார். விவேக்கின் பதிவை வைத்தும் ஜெயானந்தன் பக்கத்தில் பஞ்சாயத்து களைகட்டிக் கொண்டிருக்கிறது.