காலம் தந்த தலைவனா தினகரன்? நாஞ்சிலுக்கு திவாகரன் தரப்பு 'டோஸ்'
அதிமுகவைவிட்டு தப்பி ஓடிய டிடிவி தினகரனை காலம் தந்த தலைவன் என நாஞ்சில் சம்பத் புகழ்ந்து பேசியதற்கு திவாகரன் தரப்பு கடுமையாக எச்சரித்துள்ளதாம்.
சென்னை: காலம் தந்த தலைவன் தினகரன் என ஓவராக புகழ்ந்த நாஞ்சில் சம்பத்துக்கு மன்னார்குடியில் இருந்து திவாகரன் தரப்பு போன் போட்டு செம டோஸ்விட்டதுதான் அதிமுகவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது.
தினகரனை ஓரம்கட்டுவது என அமைச்சர்கள் முடிவெடுத்து அறிவித்துவிட்டனர். ஆனாலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் நாஞ்சில் சம்பத் வகையறாக்களும் முறுக்கிக் கொண்டு நின்றார்கள்.
அதுவும் இன்று காலை தினகரனை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத், இந்தக் கட்சியை வலுவோடு மட்டுமல்லாமல், பொலிவோடு நடத்தக் கூடிய ஆற்றல் படைத்தவர் தினகரன்.
அ.தி.மு.கவின் திசையைத் தீர்மானிக்க, காலம் தந்த தலைவன் தினகரன். பா.ஜ.கவின் மிரட்டலுக்குப் பயந்து, சிலர் எடுக்கும் முடிவுகள் எங்களைக் கட்டுப்படுத்தாது. ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பதவியைக் கொடுத்தது யார்? தினகரன் விரைவில் விஸ்வரூபம் எடுப்பார்' எனக் கொந்தளித்து போனார்.
இந்தப் பேட்டியால், கடுப்பான திவாகரன் தரப்பினர் நாஞ்சில் சம்பத்தைத் தொடர்பு கொண்டு, நிலைமை வேறு மாதிரி செல்கிறது. கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள். ஓ.எஸ்.மணியனே அமைதியாக இருக்கிறார். நீங்கள் ஏன் தேவையில்லாமல் பேசுகிறீர்கள்? என எகிறியுள்ளனர். இதில் எரிச்சலான சம்பத், எல்லாம் எனக்குத் தெரியும். உங்கள் வேலையை மட்டும் பாருங்க. மத்தவங்களை மாதிரி என்னை நினைக்க வேண்டாம் என பதிலுக்கு எரிச்சலைக் காட்டியிருக்கிறார். அதுசரி உங்க தலையெழுத்தை யார் மாற்ற முடியும்?' எனப் பேசிக் கொண்டே போனை கட் செய்ததாம் திவாகரன் தரப்பு.