எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்க முடியும்?' - விரக்தியில் திவாகரன்
அம்மா அணி எத்தனை நாட்களுக்கு தாக்கு பிடிக்கும் என்ற விரக்தியில் திவாகரன் இருக்கிறார்.
சென்னை: அம்மா அணி எனச் செயல்பட்டாலும், தினகரனிடம் இருந்து வேறு யாரும் வராததால் விரக்தியில் இருக்கிறார் திவாகரன். ' இனி பத்து நாட்களில் நல்லது நடக்கும்' என நம்பினாலும், ஆளும்கட்சியினர் யாரும் பொருட்படுத்தாததால், வேதனையில் இருக்கிறார் திவாகரன் என்கின்றனர் மன்னார்குடி கோஷ்டிகள்.
மன்னார்குடியில் அம்மா அணியின் தலைமை அலுவலகத்தைத் திறந்துவிட்டு, அமைதியாக இருக்கிறார் திவாகரன். ' மீண்டும் அ.தி.மு.கவுக்குள் நாம் கோலோச்சுவோம்' என ஆதரவாளர்களிடம் பேசி வந்தாலும், ஆட்சியில் இல்லாதபோது தியானக் கூடமாகக் காட்சியளிக்கும் கமலாலயம் போல இருக்கிறது அம்மா அணி அலுவலகம்.
முதல்வர் தரப்புக்கு அவர் அனுப்பிய தூதுக்கும் உரிய பதில் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரு அமைச்சர்கள் மூலமாகப் பேசியபோது, ' உங்க செல்வாக்கு என்ன என்பது நிரூபணம் ஆகிற வரையிலும் எங்களால் எதுவும் செய்ய முடியாது. அனைத்து எம்.எல்.ஏக்களும் என் பக்கம் என நீங்கள் பேசிய பிறகு, ஒரு எம்.எல்.ஏகூட உங்கள் பக்கம் வரவில்லை. ஒருவேளை அப்படி யாராவது வந்தாலும் அவர்களுக்கு வேண்டியதை முதல்வர் தரப்பில் செய்து கொடுப்பார்கள்.
தினகரனிடமிருந்து....
இப்போது வரையில் ஒரு நிர்வாகிகூட தினகரன் பக்கம் இருந்து உங்கள் அணிக்கு வரவில்லை. சசிகலாவைத்தான் அவர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் மன்னார்குடியில் மட்டும்தான் செல்வாக்கைக் காட்ட முடியும்.
அறிக்கை
தென்மாவட்டத்தில் உள்ள பல தொகுதிகளில் சசிகலாவுக்கு செல்வாக்கு இருக்கிறது. உங்களுக்கு எதிராகவே அறிக்கை வெளியிட வைத்துவிட்டார் தினகரன். அவரது செல்வாக்கை நீங்கள் உடைத்தால், பிறகு பார்க்கலாம்' எனச் சொல்லி அனுப்பிவிட்டனர். இதனால், மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் திவாகரன்.
சொந்த காசு
இதுகுறித்து நம்மிடம் பேசிய அம்மா அணி பிரமுகர் ஒருவர், " ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள வீட்டில் இருந்து கொண்டுதான் சிலரை சந்தித்துப் பேசி வருகிறார் திவாகரன். ராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னாள் எம்.பி ராஜேஸ்வரன் மட்டும், இந்த அணியில் வந்து சேர்ந்தார். இன்னும் சிலர் வருவார்கள் எனக் கூறிக் கொண்டிருந்தாலும் யாரும் வருவது போலத் தெரியவில்லை. கையில் இருக்கும் காசை வைத்துக் கொண்டுதான் செலவு செய்து வருகிறோம்.
மாற்று முகாம்கள்
அ.தி.மு.கவில் இருந்து ஏதாவது ஆதரவு கிடைத்தால் மட்டுமே கொஞ்சம் முன்னேற முடியும். அதற்கான சாத்தியங்களும் இருப்பது போலத் தெரியவில்லை. இங்கு வந்த நிர்வாகிகளும் மாற்று முகாம்களுக்குப் போவதற்கான வாய்ப்புகளே அதிகம்" என்றார் விரிவாக.
நல்ல விஷயங்கள்
" பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை சந்தித்து, திவாகரன் தரப்பின் நியாயங்களை விளக்குவதற்கு சிலர் முயன்று வருகின்றனர். இவையெல்லாம் பலன் அளிக்குமா எனத் தெரியவில்லை. தினகரனை மீறி சசிகலா எதையும் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர் வெளியிட்ட அறிக்கையை திரும்பப் பெறும் வேலைகளும் நடந்து வருகின்றன. சிறையைச் சுற்றிலும் எப்போதும் டி.டி.வி ஆதரவு வழக்கறிஞர்கள் வலம் வருவதால், குடும்ப ஆட்களே பல கெடுபிடிகளுக்குப் பிறகுதான் சசிகலாவை சந்திக்கிறார்கள். சிறையில் இருந்து சசிகலா வெளியில் வரும் வரையில் திவாகரனுக்கு ஆதரவாக எந்த நல்ல விஷயங்களும் நடக்கப் போவதில்லை" என்கின்றனர் குடும்ப கோஷ்டிகள்.