தீபாவளிக்காக சொந்த ஊர் பயணம்... பஸ், ரயில்களில் அலைமோதிய கூட்டம்... நெரிசலில் திணறிய சென்னை
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட லட்சக்கணக்கானோர் சொந்த ஊர் பயணம் செய்ததால் கூட்டம் அலைமோதியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னை: தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட லட்சக்கணக்கான பயணிகள் சென்னையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் திரண்டதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னையில் இருந்து இன்றும் ஏராளமானோர் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் 3,979 சிறப்பு பேருந்துகள்
இயக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு இன்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதாலும், ஆம்னி பேருந்துகள் சாரை சாரையாக வந்ததாலும், கார்கள், லாரிகள், சரக்கு வாகனங்கள் ஒரே நேரத்தில் இயக்கப்பட்டதாலும் தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் தங்கி பணிபுரியும் லட்சக்கணக்கான மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர் செல்வது வழக்கம். இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 11 ஆயிரத்து 225 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. 26ம் தேதி 3 ஆயிரத்து 254 பேருந்துகள் இயக்கப்பட்டன. 27ம் தேதியன்று 3 ஆயிரத்து 992ம் இயக்கப்பட்டன. இன்றும் காலை முதல் 3,979 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தற்காலிக பேருந்து நிலையங்கள்
இந்த ஆண்டு பயணிகள் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும் நூறடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் அருகேயும், அண்ணாநகர் (மேற்கு), தாம்பரம் சானட்டோரியம், பூந்தமல்லி ஆகிய பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த தற்காலிக பேருந்து நிலையங்களை இணைக்கும் விதமாக 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. தவிர கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் புறப்படுகின்றன.
சொந்த ஊர் பயணம்
சனிக்கிழமையன்று தீபாவளி பண்டிகை வருகிறது. வெள்ளிக்கிழமையன்று பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், தீபாவளி கொண்டாட ஏராளமானோர் சொந்த ஊர் சென்றனர். இதனால் கோயம்பேடு உள்பட அனைத்து பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதிக எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாலும், சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள் மூலமாக பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்வதாலும் பைபாஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்தது. புறநகர் பகுதியான தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசல்
ஒவ்வொரு வாகனமும் மெதுவாக ஊர்ந்து சென்றன. கார்களில் வருபவர்கள் தாம்பரம் பெருங்களத்தூர் சாலையை தவிர்க்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டும் அதனை யாரும் கேட்பதாக தெரியவில்லை இதனால் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டனர். எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கடந்த 15 நாட்களுக்கு முன்பு இருந்தே அறிவிப்பு வெளியிட்டும், பலரும் தெரியாமல் கோயம்பேடு வந்து பின்னர் தற்காலிக பேருந்து நிலையங்களுக்குச் சென்றனர்.
தவித்த பயணிகள்
தமிழக அரசோ தற்காலிக பேருந்து நிலையங்களில் நான்கு அல்லது 5 நகரும் கழிவறைகள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இது பயணிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே போன்று தற்காலிக பேருந்து நிலையங்களில் குளியலறை வசதி இல்லை என்பது பயணிகளின் குற்றச்சாட்டாகும். கோயம்பேட்டிலும் போதுமானதாக இல்லை எனவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். வயதானோர், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதியுற்றனர். இருந்தாலும், குடிநீர், கழிவறை, உட்கார இடம் என போதிய அடிப்படை வசதிகளை தனியார் பேருந்து நிலையங்களில் செய்யவில்லை என்பது புகார்.
லட்சக்கணக்கானோர் பயணம்
தற்காலிக பேருந்து நிலையங்கள் குறித்து கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஊடகங்கள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் ஆங்காங்கே பிளக்ஸ் போர்டுகளும் வைக்கப்பட்டுளளது. ஆனால், ஒரு சிலர் இதனை கவனிக்காமல் கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கே வந்து விடுகின்றனர். அவர்களுக்காக கோயம்பேடு பஸ் நிலையம் முகப்பிலும் தற்காலிக பேருந்து நிலையம் குறித்து பெரிய பிளக்ஸ் போர்டு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். புதன், வியாழக்கிழமையன்று சென்னையிலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் மூலம் லட்சக்கணக்கான பேர் பயணம் செய்துள்ளனர்.
ரயில்களில் கூட்டம்
பேருந்து நிலையங்களைப் போன்று ரயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும், சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்களை நோக்கி புறப்பட்டு சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பயணிகள் உடைமைகளில் பட்டாசுகளை மறைத்து வைத்து கொண்டு செல்கிறார்களா? என்பதை போலீசார் சோதனை நடத்தி கண்காணித்து வருகின்றனர். நாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்றும் ஏராளமானோர் பயணம் செய்வார்கள் என்பதால் போலீசார் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன கூடவே சுவீதா எக்ஸ்பிரஸ் போன்ற சிறப்பு ரயில்களிலும் கூட்டம் அலைமோதியது.