விரலில் மை வைத்து பணம் வசூல்.. விஜயகாந்த் மீது தேமுதிக தொண்டர்கள் அதிருப்தி
கட்சித் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விஜயகாந்த், போட்டோ எடுத்துக் கொள்ள ஒருவருக்கு ரூ.100 என கட்டணமும் நிர்ணயம் செய்துள்ளாராம்.
சென்னை: தேமுதிக தொண்டர்களிடம் விஜயகாந்த் நிதி வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியிலும் கூட தேமுதிக வெற்றிபெறவில்லை. வைகோ முயன்று உருவாக்கிய மக்கள் நல கூட்டணியால், விஜயகாந்த்துக்கு எந்த நலனும் கிடைக்கவில்லை.
எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்து திடீரென ஒரு சீட்டும் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டதால் தேமுதிக தொண்டர்கள் கடும் சோர்வுக்கு உள்ளாகியுள்ளனர். பலர் கட்சி மாறிவிட்டனர்.

போட்டோவுக்கு ரூ.100
இந்நிலையில், சோர்ந்து கிடக்கும் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மாவட்டம்தோறும் சுற்றுப் பயணம் செய்து 'உங்க ளுடன் நான்' என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார் விஜயகாந்த். இந் நிகழ்ச்சியில் கட்சித் தொண்டர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் விஜயகாந்த், போட்டோ எடுத்துக் கொள்ள ஒருவருக்கு ரூ.100 என கட்டணமும் நிர்ணயம் செய்துள்ளாராம்.

மை வைப்பு
அதுமட்டுமல்ல, ஒரே தொண்டர் திரும்பத் திரும்ப போட்டோ எடுப்பதைத் தவிர்ப்பதற்காக விரலில் மை வைக்கப்படுகிறதாம். இதனால் பணம் கொடுத்தாலும் மீண்டும் போட்டோ எடுக்க முடியாத சூழல் உள்ளது.

மா.செ.வுக்கு செலவு
கடந்தவாரம் ஈரோடு மாவட்டம் வந்தார் விஜயகாந்த். அப்போது அவரை உற்சாகப்படுத்தும் விதமாக, ஏராளமான தொண்டர்களை அழைத்து வந்திருந்தார் மாவட்ட செயலாளர் கோபால். தொண்டர்களிடம் பணம் இல்லாத நிலையில் மாவட்ட செயலாளர்களும், மற்ற நிர்வாகிகளும் சேர்ந்து 500 பேருக்கான ரூ.50 ஆயிரத்தைக் கட்டி போட்டோ எடுக்க வைத்துள்ளனர்.

பணம் இல்லையாம் சாமியோவ்..
ஏற்கனவே கட்சிக்கு வருமானம் இல்லை. இதில் மோடி அறிவிப்பால் பணப்புழக்கமும் இல்லை. இப்படி இருக்கும் செலவு போதாது என்று இது வேறா என்று புலம்புகிறார்களாம் தேமுதிக நிர்வாகிகள். கவனம் கேப்டன்.. இருக்கும் தொண்டர்களும் செலவுக்கு பயந்து ஓடிவிட்டால் என்ன செய்வது.












Click it and Unblock the Notifications