மண்டபம் இடிப்பை மறந்து திமுகவுடன் சேருவாரா 'கேப்டன்'?.. "9-9-9"ல் தெரியும்!
சென்னை: திமுக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் ஆவலுடன்! எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தேமுதிகவின் செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது. சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்வதற்காக கூட உள்ள பொதுக்குழு கூட்டம் என்பதால் ஊடகங்களும், இதை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றன.
அரசியலோ பொது இடமோ விஜயகாந்த் என்றாலே பரபரப்புதான். யாருடன் கூட்டணி என்று கேட்டால் ஜனவரிக்குப் பிறகு அறிவிப்பேன் என்று கூறி வந்த விஜயகாந்த், ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு நிறைந்த அமாவாசை நாளில் 9ம் தேதி 9 மணிக்கு 9 நிமிடத்தில் பெரம்பலூரில் கூடுகிறது.
காலை 9 மணிக்குள் மண்டபத்துக்குள் வந்துவிட வேண்டும். தாமதமாக வந்தால் உள்ளே அனுமதி இல்லை.பொதுக்குழு மண்டபத்துக்கு வருவதற்கான அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்களை அனுமதிக்க மாட்டோம். பொதுக்குழுவுக்கு வருகிறவர்கள் முன்னதாக அந்தந்த மாவட்டச் செயலாளர்களை நேரில் சந்தித்து, அடையாள அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்" என்றெல்லாம் கட்சியினருக்கு தே.மு.தி.க. சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தேமுதிகவின் நிலை
தேமுதிக 2005ம் ஆண்டு தொடங்கப்பட்ட போது மக்களுடன் கடவுளுடன் கூட்டணி என்று தொடங்கப்பட்டது. தனித்து போட்டியிட்ட தேமுதிக ஒரு எம்.எல்.ஏ உடன் சட்டசபையில் தனது இருப்பை பதிவு செய்தது. 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து 29 எம்.எல்.ஏக்களுடன் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.
லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி
அதிமுக உடன் எதிர்ப்பு நிலையை எடுத்ததை அடுத்து தேமுதிக எம்.எல்.ஏக்கள் 7 பேர் அதிமுக ஆதரவு எம்.எல்.ஏக்களாக மாறினர். நாடாளுமன்ற லோக்சபா தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. வாக்குவங்கியும் சரிந்தது.
இழுக்கும் கட்சிகள்
தேமுதிக எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறது என்று பாஜக கூறிக்கொண்டிருக்கும் நிலையில் மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் வருவார் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் வைகோ. அதே நேரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை விஜயகாந்த்.
பொதுக்குழு செயற்குழு
பரபரப்பான இந்த சூழ்நிலையில் பொதுக்குழு, செயற்குழு கூடுகிறது. காலையில் தேமுதிகவினர் மத்தியில் பேச உள்ள விஜயகாந்த்,
செய்தியாளார்களை பகல் ஒரு மணிக்குதான் சந்திக்கப் போகிறார். பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் பேசுவது கசியக்கூடாது என்பதற்காகவே செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பார்த்தசாரதிக்கு ஜாமீன்
தே.மு.தி.க. தொடங்கியது முதல் கூட்டப்பட்ட அத்தனை பொதுக்குழுவிலும் இடம்பெற்ற எழும்பூர் பார்த்தசாரதி பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவுக்கு எப்படியும் அழைத்து வந்துவிட வேண்டும் என்று விஜயகாந்த் பெருமுயற்சி எடுத்துக் கொண்டதன் பலனாக ஜாமீன் கிடைத்துள்ளது.
நம்பர் 9 சென்டிமென்ட்
ஜெயலலிதா போல இப்போது விஜயகாந்த் ராசி நம்பரும் 9தானாம் அதனால்தான் அமாவசை நாளில் 9ம் தேதி 9 மணிக்கு கூடுகிறது. தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் கட்சியுடன் இணைவாரா? அல்லது மண்டப இடிக்கப்பட்டதை மறந்து விட்டு திமுக உடன் கூட்டணி சேர்ந்து துணை முதல்வர் பதவியை கேட்பாரா? என்பது நாளை தெரிந்து விடும்.