தேமுதிகவில் அடுத்த விக்கெட் அவுட்: குமரி மேற்கு மாவட்ட மா.செ தினேஷ் திமுகவில் ஐக்கியம்
சென்னை: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் தினேஷ் இன்று அண்ணா அறிவலாயத்திற்குச் சென்று திமுகவில் இணைந்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 46 நாட்கள் மட்டுமே உள்ளது. வேட்புமனு தாக்கல் இம்மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. ஆளுங்கட்சியான அதிமுகவை வீட்டுக்கு அனுப்ப வலுவான கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க திட்டமிட்டது திமுக. தேமுதிக உடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இழுக்க முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியும், இந்திய முஸ்லீம் லீக் கட்சி, மனித நேய மக்கள் கட்சியும், சிறு சிறு குட்டி கட்சிகள் மட்டுமே திமுக உடன் கூட்டணியில் உள்ளது. ஆனால் கடந்த காலங்களில் திமுகவை உடன் கூட்டணியில் இருந்த கட்சிகளான பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக ஆகிய கட்சிகள் தனி தனி அணியாக பிரிந்து களம் காண்கின்றன.
இதில் மதிமுக, கம்யூனிஸ்ட்கள், விடுதலை சிறுத்தைகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியுடன் தேமுதிக இணைந்துள்ளது. விஜயாந்த் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கூட்டணியில் இணையாத தேமுதிகவை கரைக்கும் வேலையை திமுக மெதுவாக தொடங்கி விட்டது. கடந்த சில நாட்களாகவே தேமுதிக நிர்வாகிகள் பலரும் திமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர்.
கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வடசென்னை மாவட்ட செயலர் யுவராஜ், கருணாநிதியை சந்தித்து ,தி.மு.க.வில் ஐக்கியமானார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று குமரி மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலர் தினேஷ் , அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ், மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் தன்னிச்சையாக இணைந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். நேர்காணலின் போது பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் திமுக கூட்டணியில் இணைய வேண்டும் என்று கூறியதாக தினேஷ் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நிதியாக ரூ. 100 கோடி வசூலித்து விஜயகாந்திடம் மாவட்ட செயலாளர்கள் அளித்துள்ளதாகவும் தினேஷ் கூறியுள்ளார். விஜயகாந்த் செயல்பாடுகளுக்கு கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு நிலவுவதாகவும் தினேஷ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே தேமுதிகவில் சீட் கேட்டு பணம் கட்டிய பல மாவட்ட செயலாளர்கள் தற்போது போட்டியிட விரும்பவில்லை என்று கூறி வருகிறார்களாம். விஜயகாந்திற்கு நேரடியாக போன் போட்டு பேசும் பல நிர்வாகிகள், எனக்கு பதிலாக யாரை நிறுத்தினாலும் நான் ஜெயிக்க வைக்கிறேன் என்று கூறி வருகிறார்காளாம்.
கோவை மாவட்ட செயலாளர் பாண்டியன், திருப்பூர் மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், மாநில மகளிர் அணிச் செயலாளர் சிவகாமி, நாமக்கல் மாவட்ட செயலாளர் சம்பத்குமார், தொழிற்சங்க நிர்வாகி சவுந்தரபாண்டியன், மாநில இளைஞரணி இணைச்செயலாளர் அன்பரசு ஆகியோரும் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்களாம்.
தேமுதிகவில் இருந்து 18 மாவட்ட செயலாளர்களை தேர்தலுக்கு முன்பாக இழுத்து விட வேண்டும் என்று திமுகவில் முக்கிய தலைவர் ஒருவர் அசைன்மெண்ட் கொடுத்திருக்கிறாராம். இரண்டு நாட்களில் 2 பேரை இழுத்தாகி விட்டது. வேட்பாளர் பெயர்களை அறிவிக்கும் முன்பாக இன்னும் எத்தனை பேர் திமுக பக்கம் சாயப் போகிறார்களோ என்று தேமுதிகவினர் கிசுகிசுக்கின்றனர்.
மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளின் தொடர் நெருக்கடி காரணமாகவே விஜயகாந்த், கட்சி அலுவலகத்திற்குக் கூட வருவதில்லை என்று கூறப்படுகிறது. தேமுதிகவில் 124 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் சிக்குவார்களாக? அல்லது தேடித்தான் பிடிக்கவேண்டுமா?