பாஜக, தேமுதிகவுக்காக 3 தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் பாமக... தொடரும் ராஜ்யசபா சீட் பேரம்!!
சென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து பாமக அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவரை தாம் போட்டியிடுவதாக அறிவித்த 10 தொகுதிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்ற பிடிவாத நிலையில் இருந்து பாமக இறங்கி வர முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.
லோக்சபா தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஏற்கெனவே அறிவித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. அதாவது கிருஷ்ணகிரி - ஜி.கே.மணி, அரக்கோணம் - அ.வேலு, ஆரணி - ஏ.கே.மூர்த்தி, புதுச்சேரி - அனந்தராமன், விழுப்புரம் - வடிவேல் ராவணன், மயிலாடுதுறை - அகோரம், சிதம்பரம் - கோபி, திருவண்ணாமலை - எதிரொலி மணியன், கடலூர் - கோவிந்தசாமி, சேலம் - அருள் ஆகியோர்தான் பா.ம.க. வேட்பாளர்கள்.
கடந்த 2 மாதங்களாக இவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி வேட்பாளர்களை அறிவித்த பின்னர் பாரதிய ஜனதாவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது பா.மக.
சேலம், கிருஷ்ணகிரி எங்களுக்கு- பாஜக
ஆனால் பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்த சேலம், கிருஷ்ணகிரி தொகுதிகளை பாரதிய ஜனதா கேட்டது.
பாமகவின் 8 தொகுதி வேண்டும்- தேமுதிக
அதேபோல் தேமுதிகவுக்கும் வட மாவட்டங்களில் செல்வாக்கு அதிகம். அதனால் பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்த அரக்கோணம், ஆரணி, விழுப்புரம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருவண்ணாமலை, கடலூர், சேலம் ஆகிய தொகுதிகளைக் கேட்கிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த இடியாப்ப சிக்கலால்தான் பாஜக கூட்டணியில் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் தேமுதிகவும் பாமகவும் அதிகாரப்பூர்வமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அறிவித்திருக்கின்றன.
3 தொகுதிகளை விட்டுக் கொடுக்கும் பாமக?
திரைமறைவில் நடந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் முடிவாகி இருக்கிறது. பா.ம.கவும் 10 தொகுதி பிடிவாதத்தை விட்டு இருப்பதாக தெரிகிறது.
கிருஷ்ணகிரி, சேலம்
பாமக போட்டியிடுவதாக அறிவித்த 10 தொகுதிகளில் கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய தொகுதிகளை பாரதிய ஜனதாவுக்கு விட்டுக் கொடுக்க பாமக முடிவு செய்துள்ளதாம்.
ஒரு ராஜ்யசபா சீட்..
அப்படி கிருஷ்ணகிரியை விட்டுக் கொடுக்கும் நிலையில் தருமபுரி தொகுதியில் பாமகவின் ஜி.கே. மணி போட்டியிடுவாராம். அதே நேரத்தில் தருமபுரியில் போட்டியிடுவதாக கூறப்பட்ட அன்புமணிக்கு ஏதாவது ஒரு மாநிலத்தில் இருந்து பாஜக 'ராஜ்யசபா' சீட் வாங்கித் தர வேண்டும் என்கிறது பாமக.
சேலம்..
அதேபோல் பாமக போட்டியிடுவதாக அறிவித்த சேலம் தொகுதியையும் கூட பாரதிய ஜனதா கட்சி போட்டியிட்டால் விட்டுக் கொடுக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளது பாமக.
தேமுதிகவுக்காக கடலூர்?
அத்துடன் தேமுதிக விரும்புகிறது என்கிற நிலையில் கடலூர் லோக்சபா தொகுதியையும் பாமக, கூட்டணி தர்மத்துக்காக விட்டுக் கொடுக்க முன்வந்துள்ளதாம்.
அடம்பிடிக்குமா தேமுதிக?
பாமகவின் இந்த விட்டுக் கொடுப்புகளை தேமுதிக ஏற்குமா என்பதும் சந்தேகமே. பா.ம.க. வேட்பாளர்களை அறிவித்திருக்கும் தொகுதிகளில் 8ஐ கேட்டு அடம்பிடிக்கும் அக்கட்சி குறைந்தது பாமகவின் 5 தொகுதிகளையாவது பறித்துக் கொள்ளும் என்றே தெரிகிறது. அப்போது பா.ம.க. என்ன முடிவு எடுக்கும்? ஏற்றுக் கொள்ளுமா? அல்லது வேறு ஏதேனும் முடிவு எடுக்குமா? என்பதற்கு நாளைக்குள் விடை கிடைத்துவிடும்.