சட்டசபையில் பேச வாய்ப்பளிக்க மறுப்பு: எதிர்கட்சிகள் வெளிநடப்பு; தேமுதிக புறக்கணிப்பு
சென்னை: அரசு ஊழியர்கள் போராட்டம், மாற்றுத்திறனாளி மரணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி காங்கிரஸ், தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதால், தேமுதிக எம்எல்ஏக்கள் சட்டசபை கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளனர்.
தமிழக சட்டசபையில் முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று 110 விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
முதல்வர் ஜெயலலிதா பேசி முடித்த பிறகு தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க., புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் சார்பில் போராட்டத்தின் போது உயிரிழந்த மாற்றுத் திறனாளி மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி கேட்டனர். இதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் அந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
குப்புசாமி மரணம்
வெளிநடப்பு செய்த பிறகு சட்டசபைக்கு வெளியே தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பாபு முருகவேல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,
மாற்றுத்திறனாளிகள் 6 அம்ச கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு அவர்கள் மீது இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட வேலூரை சேர்ந்த குப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி மரணம் அடைந்து விட்டார். அதுபற்றி பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதிக்கவில்லை.
பேச அனுமதிக்கவில்லை
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச 22 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்து இருக்கிறோம். ஆனால் எந்த பிரச்சனை குறித்தும் பேச அனுமதிக்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தங்கவேல்
இறந்த மாற்றுத் திறனாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டோம். அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம். முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக கூறி இருக்கிறார். ஆனால் 110வது விதியின் கீழ் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ தங்கவேல் கூறினார்.
கடைசி நாளில் அறிவிப்பு
தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் தற்போது சென்னைக்கு மட்டும் மூத்தகுடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் அதுவும் 10 டோக்கன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த அறிவிப்பை கடைசி நாளில் அறிவிக்கிறார்கள் என்றார்.
விஜயதாரணி எம்.எல்.ஏ
காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதாரணி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதைப்பற்றி பேச வாய்ப்பளிக்காத காரணத்தால் வெளிநடப்பு செய்துள்ளதாக கூறினார். இதேபோல் பாமக எம்.எம்.ஏ கணேஷ்குமார், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆகியோரும் பேச வாய்பளிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.
தேமுதிக புறக்கணிப்பு
இதனிடையே தமிழக சட்டசபை கூட்டத் தொடர் முழுவதையும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழக சட்டசபையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடர் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுவதால், தேமுதிக எம்எல்ஏக்கள் சட்டசபை கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக இன்று அறிவித்தனர்.
விஜயகாந்த் வரவே இல்லை
சட்டசபையில் தேமுதிக எதிர்கட்சியாக உள்ளது. எதிர்கட்சித்தலைவர் விஜயகாந்த் கடந்த மூன்று ஆண்டுகளாகவே சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வில்லை.சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும், விஜயகாந்த்துக்கும் கடந்த 2012ம் ஆண்டு நேரடியாக மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து விஜயகாந்த் மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் அவையிலிருந்து அவைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
விஜயகாந்த் சஸ்பெண்ட்
அப்போது விஜயகாந்த், பேரவையில் தரக்குறைவாக பேசியதாக உரிமைக்குழு விசாரிக்க சபாநாயகர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதனையடுத்து விஜயகாந்தை 10 நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அது முதலே விஜயகாந்த் சட்டசபைக்கு செல்லவில்லை. அப்படியே சென்றாலும் லாபி வரை சென்று கையெழுத்து போட்டு விட்டு சென்று விடுவார்.
2 நாள் மட்டுமே வந்த 6 தேமுதிக "சஸ்பெண்ட்" எம்.எல்.ஏக்கள்
இந்த நிலையில் 2011-16ம் ஆட்சி காலத்தின் கடைசி கூட்டத் தொடர் என்பதால் இந்த கூட்டத் தொடரில் தேமுதிக எம்.எல்.ஏக்களுடன் விஜயகாந்த் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த், கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கிறார். சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் ஆன 6 எம்.எல்.ஏக்கள் நீண்ட சட்ட போராட்டத்திற்குப் பின்னர் கடந்த இரண்டு நாட்களாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.
வெளிநடப்பு, புறக்கணிப்பு
எதிர்கட்சியினர் யாரையும் பேச சபாநாயகர் அனுமதிக்காததை கண்டித்து, தேமுதிக எம்.எல்.ஏக்கள் இரண்டு நாட்களாக வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் இந்த நிலையில் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்காமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
திமுகவும் புறக்கணிப்பு
கூட்டத் தொடர் நடைபெறுவதே 4 நாட்கள்தான், அதிலும் வெளிநடப்பு, புறக்கணிப்பு என்று செய்து வருகின்றனர் எதிர்கட்சி எம்.எல்ஏக்கள். ஏற்கனவே சட்டசபை நடவடிக்கைகளில் பங்கேற்காமல் புறக்கணிக்கப் போவதாக திமுகவும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.