காவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசு விழாவில் கலந்து கொள்வதா... ஸ்டாலின் குழப்பம்
காவிரி நீர் திறந்து விடாத கர்நாடகா அரசு விழாவில் கலந்து கொள்வதா வேண்டாமா என்பது குறித்து ஸ்டாலின் யோசனையில் உள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடாத கர்நாடகா மாநில அரசு விழாவில் கலந்து கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளார்.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னதாகவே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைத்தார்.
அதன்படி குமாரசாமி நாளை மறுதினம் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவுக்கு மம்தா பானர்ஜி, ஸ்டாலின், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தின் மீது கோபம்
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் தமிழகத்துக்கு கர்நாடகா அரசு தண்ணீர் திறந்துவிடுவதில்லை. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் கர்நாடகத்தின் மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
வாக்குறுதி
ஜேடிஎஸ் சார்பில் தேர்தலை சந்தித்த குமாரசாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாது என்ற உறுதிமொழியை தேர்தல் வாக்குறுதியாக கொடுத்திருந்தார். அவ்வாறு வாக்குறுதி கொடுத்திருந்த குமாரசாமியே தற்போது முதல்வராக பதவியேற்கவுள்ளார்.
எடியூரப்பாவுக்கு வாழ்த்து
இதனால் காவிரி குறித்த அச்சம் இன்னும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கையின்போது முன்னிலையில் இருந்த பாஜக திடீர் திருப்பத்தால் பெரும்பான்மை இல்லாமல் போகும் என்பது தெரியாமல் எடியூரப்பாவுக்கு அவசரப்பட்டு வாழ்த்து தெரிவித்தார் ஸ்டாலின்.
தமிழர்களுக்கு எதிரானது
அதேபோல் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குமாரசாமிக்கும் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தமிழர்களுக்கு எதிரானது என்று எதிர்க்கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும் கருத்து கூறி வருகின்றனர்.
முடிவு செய்யப்படும்
காவிரி பிரச்சினை தலைவிரித்தாடும் நிலையில் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டால் தமிழக மக்களுக்கு திமுக மீது அதிருப்தி ஏற்பட்டுவிடும். மேலும் காவிரிக்காக அனைத்துக் கட்சி கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியதில் பிரயோஜனம் இல்லாமல் போய்விடும் என்பதால் அந்த விழாவுக்கு போகலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து இன்று முடிவு செய்யப்படும் என தெரிகிறது.