தேமுதிக, மார்க்சிஸ்ட்டுக்காக திமுக கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறுத்தம்?
சென்னை : லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக தேர்தல் களம் அப்படியே தலைகீழாக மாறிக் கொண்டிருக்கிறது. அதிமுக அணியை விட்டு இடதுசாரிகள் வெளியேற இருக்கின்றனர். திமுக அணியில் தேமுதிக இணைய இருக்கிறது என்ற தகவல்களைத் தொடர்ந்து திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
தி.மு.க. கூட்டணியில் நேற்று நடைபெற்ற தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியும், மனிதநேய மக்கள் கட்சிக்கு மயிலாடுதுறை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்குவதில் சிக்கல் நிலவியது. இதனால் அக்கட்சிகளுக்கான தொகுதிகள் நேற்று ஒதுக்கப் படவில்லை. தொடர்ந்து இன்றும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் காலையில் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் இடைநிறுத்தப்பட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணா அறிவாலய வட்டாரங்கள், திமுக அணியில் தேமுதிக இடம்பெற உள்ளது. கணிசமான தொகுதிகள் அந்த கட்சிக்கு கொடுக்கப்பட இருக்கிறது. அத்துடன் பாஜகவுடன் அதிமுக போக முடிவெடுத்திருப்பதால் இடதுசாரிகள் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.
அதிமுகவை விட்டு வெளியேறும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் மார்க்சிஸ்ட் கட்சி திமுக அணிக்கு வர வாய்ப்பிருக்கிறது. இதனால் தற்போதைய நிலையில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்திருக்கிறது திமுக தலைமை என்கின்றன.
தேமுதிகவுக்காக எங்களுக்கான தொகுதிகளை பறித்துவிட்டு ஒரே ஒரு தொகுதியைத் தருவதாக சொல்வதா என்று உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்களாம் சிறுத்தைகள். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கிறது.