தமிழகத்தில் தனித்துப் போட்டியிட தைரியம் உள்ளது: ப.சிதம்பரம்
சென்னை: தமிழகத்தில் கூட்டணி அமையாவிட்டால், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "காங்கிரஸ் கூட்டணி அமைத்தோ அல்லது தனித்தோ லோக்சபாத் தேர்தலை எதிர்கொள்ளும்.
ஒருவேளை கூட்டணி எதுவும் அமையவில்லை என்றாலும், அனைத்து (40 இடங்கள்) தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்துவோம். காங்கிரஸ் கட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்" என்றார் ப.சிதம்பரம்.
திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்க முயற்சிகள் மேற்கொண்ட போதிலும்,கடைசி நேரத்தில் மு.க.ஸ்டாலினின் தலையீடு காரணமாக, அந்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை 35 தொகுதிகளுக்கும் திமுக நேற்று வேட்பாளர்களை அறிவித்து விட்டது. இந்த நிலையில் ப.சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார்.
பலவீனப்படுத்துறாங்க... ஞானதேசிகன்
அதேபோல காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் முயற்சியில் கூட்டணி குறித்து பல்வேறு தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருவதாக, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நடைபெற இருக்கின்ற லோக்சபா தேர்தல் பணிக்கு தமிழக காங்கிரஸ் தன்னை தயார்படுத்தி வைத்திருக்கிறது. தமிழகமெங்கும் காங்கிரஸ் நண்பர்கள் தேர்தலை எதிர்கொள்ள உற்சாகமாக இருக்கிறார்கள்.
தேர்தல் பணி குறித்த ஆலோசனை செய்வதற்கு வருகிற 14.3.2014 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.