தமிழக அரசியலில் பரபரப்பு... ஒரே மேடையில் திமுக- தேமுதிக- மதிமுக- பாமக- பாஜக?
சென்னை: சட்டசபை தேர்தல் கூட்டணிக்கு முன்னோட்டமாக தமிழகத்தில் நிகழ்வுகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. இதன் ஒரு பகுதியாக அடுத்த மாதம் ஒரே மேடையில் திமுக, தேமுதிக, மதிமுக, பாமக கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி. தருண் விஜய், தொடர்ந்து தமிழுக்காகக் குரல் கொடுத்து வருகிறவர். உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திருவள்ளுநர் நாளை இந்திய மொழிகள் நாளாக அறிவிக்க வலியுறுத்தியவர்.
மேலும் வடமாநிலங்களில் தமிழை ஒரு விருப்பப் பாடமாக்க வேண்டும்; சேர, சோழர் மற்றும் பாண்டியர் வரலாற்றையும் பாடப்புத்தகங்களில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்றும் குரல் கொடுப்பவர்.
11-ந் தேதி பாராட்டு விழா
இவருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கு திமுகவுக்கு மிக நெருக்கமானவரான வைரமுத்து ஏற்பாடுகளை செய்து வருகிறார். சென்னை மியூசிக் அகாதமியில் அடுத்த மாதம் 11-ந் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திமுக, தேமுதிக, பாமக, மதிமுக மற்றும் இடதுசாரித் தலைவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாஜகவைச் சேர்ந்தவர் தருண் விஜய் என்பதால் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுவிட்டது.
திமுக- மதிமுக- பாமக பங்கேற்கும்
வைரமுத்து நடத்தும் நிகழ்ச்சி என்பதால் நிச்சயம் திமுகவினர் இதில் கலந்து கொள்வர். திமுகவுடன் இணக்கமாக இருக்கும் மதிமுக மற்றும் பாமக தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புண்டு.
தேமுதிக தயக்கம்
அதே நேரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று குரல் கொடுக்கிற தேமுதிக, இதில் கலந்து கொள்வதா? இல்லையா என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.
பாஜக வரும்..
தருண்விஜய் பாஜக எம்.பி என்பதால் பாஜகவினரும் கலந்து கொள்ளக் கூடும்.
கம்யூனிஸ்டுகள் வருவார்கள்..
கம்யூனிஸ்டுகளும் இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. ஏற்கெனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத் திறப்பு விழாவில் பாஜகவின் தமிழிசை சவுந்திரராஜன் கலந்து கொண்டதால் பொதுநிகழ்வுதானே என்று கம்யூனிஸ்டுகளும் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.
கூட்டணிக்கு அச்சாரம்
பாஜக, கம்யூனிஸ்டுகள் ஒரு காலத்திலும் கூட்டணி அமைக்காது என்ற போதும் இதர கட்சிகள் ஒரே மேடையில் பங்கேற்பது அது கூட்டணிக்கான அச்சாரமாக இருக்கும் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.