ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன் சந்தித்தது அதிர்ச்சியாக உள்ளது: ஸ்டாலின்
சென்னை: இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்தது அதிர்ச்சியளிக்கிறது என்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. கூட்டணியில் தொகுதி உடன்பாடு இன்று முடிவடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. குழுவுடன், கூட்டணி கட்சி தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதற்கிடையே, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை எந்த நிலையில் உள்ளது?.
பதில்: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இன்று தொகுதி பங்கீடு முடியும்.
கேள்வி: மியான்மர் சென்ற பிரதமர் மன்மோகன்சிங், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்து பேசியுள்ளாரே?.
பதில்: இது அதிர்ச்சியளிக்கும் செய்தி என்று தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். என்னுடைய கருத்தும் அதுதான்.
கேள்வி: தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகிறார்களே?.
பதில்:- இதற்கு தி.மு.க. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
கேள்வி: ராஜீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்ற 7 பேரை விடுதலை செய்ததற்கு தடை கேட்டு மத்திய அரசு மேல் முறையீடு செய்துள்ளதே?.
பதில்: இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் உள்ளது. அதனால், கருத்து சொல்ல முடியாது.