நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஹைகோர்ட் தடை நீடிப்பு - திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து
இன்று மாலை நடைபெறுவதாக இருந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது
Recommended Video

சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த நீதிமன்றம் விதித்துள்ள தடை நீடிப்பதை அடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை கடந்த திங்கட்கிழமையன்று சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே குட்கா விவகாரத்தில் திமுக எம்எல்ஏக்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கையை சபாநாயகர் எடுப்பாரோ என்ற ஐயம், திமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று சென்னை வந்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

அடுத்த கட்ட நடவடிக்கை
இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விரிவாக பேசப்பட்டது. அடுத்தகட்டமாக திமுக எடுக்கவேண்டிய நிலை என்ன என்பது குறித்தும் திமுக எம்எல்ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் ஆலோசித்தனர்.

தீர்மானங்கள்
18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தது ஜனநாயக விரோத நடவடிக்கை என்று இக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர், சபாநாயகரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர் முழு தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரசுக்கு கண்டனம்
மேலும் அரசு விழாக்களை அரசியல் மேடையாக்குவதை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என விமர்சனம் செய்யப்பட்டது.

மீண்டும் எம்எல்ஏக்கள் கூட்டம்
இந்த நிலையில் இன்று மீண்டும் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் மீண்டும் மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

கூட்டம் ரத்து
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீடித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications