கைப்பேனா டூ டிஜிட்டல் மீடியம்... பத்திரிக்கையாளரின் பார்வையில் கருணாநிதி!
கருத்துகளை மக்கள் மத்தியில் துண்டு பிரசுரத்தில் எழுதி விநியோகித்தது முதல் சமூக ஊடகம் வரை அனைத்தையும் கற்று வைத்திருந்தார் கருணாநிதி.
சென்னை: பத்திரிக்கையாளராகவே இருந்து பல நிலைக்கு உயர்ந்த கருணாநிதி மக்களின் குரலாக ஒலிக்கும் பத்திரிக்கைகளின் கேள்விக்கு செவிமடுக்க என்றுமே தயங்கியதில்லை என்பதும் அவரைப் பலரும் அறிந்து கொள்வதற்கான விஷயமாக அமைந்தது.
பேச்சாளர், எழுத்தாளர், வசனகர்த்தா, கைதேர்ந்த அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட கருணாநிதி இன்று தனது 94வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார். தமிழக டெல்டா பாசன மாவட்டமான திருவாரூரில் பிறந்து இன்று நாடே திரும்பிப் பார்க்கும் பழுத்த அரசியல்வாதி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பள்ளிப்பருவத்திலேயே 'தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்' என்ற பெயரில் மாணவர் அமைப்பை தொடங்கி தனது அரசியல் பயணத்துக்கு விதை போட்டார். தனது பணிகளை விளம்பரப்படுத்த சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். துண்டுபிரசுரங்களாக கைகளாலேயே எழுதி அவற்றை மக்களிடையே விநியோகிப்பதே இவரது பத்திரிக்கைப் பணியின் தொடக்கம்.
பத்திரிக்கையாளர்
இதனைத் தொடர்ந்து 1942ஆம் ஆண்டு, "முரசொலி" பத்திரிக்கையை தொடங்கினார். அன்று முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி, தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் கார்ட்டூன், கடுமையான விமர்சனங்கள் மூலம் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு', ‘முத்தாரம்', ‘தமிழரசு' போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வந்தார்.
வாசிப்பு பழக்கம்
சட்டப்பேரவையில் இவர் நுழைந்த 60 ஆண்டுகள் நிறைவுபெற்றுவிட்டன, ஏறத்தாழ இரண்டு தலைமுறை பத்திரிக்கையாளர்கள் இவருடன் பயணித்து வந்துள்ளனர். தீவிர அரசியலில் இருந்தது முதல் உடல்நிலை பாதிக்கப்படுவதற்கு முன்பு வரை கருணாநிதி அதிகாலையிலேயே எழுந்து அனைத்து தினசரி தமிழ் நாளிதழ்களையும் வாசிக்கும் பழக்கத்தை வைத்திருந்தவர்.
போனில் ரெய்டு
எந்த நாளேட்டில் என்ன செய்தி வந்துள்ளது என்பதை தேதியோடு அடிக்கோடிட்டு காட்டும் அளவிற்கு அவர் அன்றாட நிகழ்வுகள் ஒரு வரி விடாமல் வாசித்து விடுவார். சில சமயங்களில் கருணாநிதியை மோசமாக விமர்சிக்கும் கட்டுரைகளுக்கு அந்த அலுவலகத்திற்கே தொலைபேசி போட்டு பேசிய கதைகளும் உண்டு.
தனிப்பட்ட கவனம்
விமர்சனங்கள் எதுவாயினும் அதனை ஏற்றுக் கொண்டு பத்திரிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளை புறந்தள்ளாமல், நிதானத்துடன் தனக்கே உரிய பாணியில் கருத்துகளை உதிர்க்கும் வல்லமை படைத்தவர். மூத்த பத்திரிக்கையாளர் முதல் இளம் பத்திரிக்கையாளர் வரை அனைவரின் பெயர் உள்பட அனைத்து விவரங்களையும் சேகரித்து அவற்றை நினைவுபடுத்துவார் கருணாநிதி.
சுவாரஸ்யங்கள்
தற்போதைய காலகட்டங்களில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு என்பது சடங்காகிப் போன நிலையில் கருணாநிதியின் செய்தியாளர்கள் சந்திப்பில் நக்கல் விமர்சனங்கள், கருத்து மோதல்கள் என சுவாரஸ்யங்களுக்கு பஞ்சம் இருக்காது. இதற்காகவே அவரது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பலர் ஆர்வத்துடன் கலந்து கொள்வார்கள்.
முகநூல் பக்கம்
கைகளால் எழுதி பத்திரிக்கை விநியோகம் செய்த காலம் மாறி கம்யூட்டர் யுகம் வந்தது, கணினி பயின்று 2014ம் ஆண்ட முதல் தனது முகநூல் பக்கத்திலும் ஜனநாயகத்தை கடைபிடித்தார் கருணாநிதி. தேர்தல் பிரச்சார நேரத்தில், இணையவாசிகளுடன் தொடர்பில் இருக்கவும், அவர்களுடன் பிரச்சாரக் கருத்துகளைப் பகிரவும் முழுவீச்சில் செயல்படவே தொடங்கிய கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்கம் தொடங்கப்பட்டது
யாரை விட்டது வயோதிகம்
ஓயாத படிப்பினை நல்ல கல்வியறிவோடு நினைவாற்றலையும் அதிகரிக்கும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இருந்தார் கருணாநிதி. பொது மேடைகளானாலும், பொதுக்கூட்டங்கள் என எதுவாக இருந்தாலும் தானே குறிப்பெடுத்து ஏறத்தாழ 10 பக்கங்களுக்கு குறையாத அறிக்கையை தானே தயாரிப்பார். அத்தனை நினைவாற்றல் பெற்ற கருணாநிதி இன்று வயோதிகம் காரணமாக தன்னை சுற்றி நடப்பதை கூடி நினைவுபடுத்த முடியாமல் இருப்பது கவலையளிக்கும் விஷயம் தான்.