ஆறுமணி நேர ஆபரேசனுக்கு காத்திருந்த திமுக!… அடித்து நொறுக்கிய அதிமுக!!
சென்னை: ஏற்காடு இடைத்தேர்தல் பிஸியில் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் சென்னையில் இன்று நடைபெறும் மூன்று அமைச்சர்களின் திருமண விழாவில் பங்கேற்ற தலைமை தடை விதித்துவிட்டது.
அதிமுக அமைச்சர்கள் கூட்டம் காலியான உடன் வாக்காளர்களை வகையாக சந்தித்து வளைக்கலாம் என திட்டமிட்டிருந்த திமுகவினர் இந்த திடீர் நடவடிக்கையினால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஒரு சில முக்கிய அமைச்சர்கள் மட்டுமே சென்னைக்கு சென்றுள்ள நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் வாக்காளர்கள் மாறிவிடாமல் இருப்பதற்கான வகையாக ஏற்பாடுகளை செய்து வருகின்றனராம்.
இடைத்தேர்தல் ஜோர்
ஏற்காடு சட்டசபை தொகுதிக்கு, டிசம்பர், 4ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், இம்மாதம், 9ம் தேதி துவங்கி, 16ம் தேதி நிறைவு பெற்றது. அ.தி.மு.க., சார்பில், மறைந்த எம்.எல்.ஏ., பெருமாள் மனைவி சரோஜா, தி.மு.க., சார்பில் மாறன், போட்டியிடுகின்றனர்.
அதிமுக – திமுக
முக்கிய கட்சிகளான, தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., பா.ஜ., காங்., ஆகிய கட்சிகள், வேட்பாளர்களை நிறுத்தவில்லை.தேர்தலில் போட்டியிட, 27 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களில், 15 பேர் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும் இடையே, நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆதரவு கொடுங்களேன்
தி.மு.க., வேட்பாளரை, பொது வேட்பாளராக நினைத்து, ஆதரவு அளிக்கும்படி, கருணாநிதி கடிதம் எழுதினார். அ.தி.மு.க., ம.தி.மு.க., தவிர, அனைத்து கட்சிகளுக்கும், தி.மு.க., தலைவர் கருணாநிதி, கடிதம் எழுதினார். அதை ஏற்க மறுத்த கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க.,விற்கு, ஆதரவு தெரிவித்தன.
ஜெயிக்க மும்முரம்
வரவிருக்கும் லோக்சபா தேர்தலுக்கு, முன்னோட்டமாக இந்த இடைத்தேர்தல் கருதப்படுவதால், எதிர்த்து போட்டியிடும், தி.மு.க., உட்பட அனைத்து வேட்பாளர்களையும், டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதற்காக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என 61 பேரை களத்தில் இறக்கியுள்ளது.
திமுகவின் சுறுசுறுப்பு
திமுகவும் தன் பங்கிற்கு மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆகியோரை, பொறுப்பாளர்களாக நியமித்துள்ளனர். அவர்களும், வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரித்து வருகின்றனர்.இரு தரப்பினரும், வெற்றிக்காக பம்பரமாக சுழல்வதால், ஏற்காடு தொகுதி முழுவதும், வெளியூர் ஆட்கள் குவிந்து, பரபரப்பு நிலவுகிறது.
கண்காணிப்பு குழு
இரு கட்சியிலும், எதிர் தரப்பினரின் செயல்பாடுகளை கண்காணிக்க, தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் மாற்றி ஒருவர் மாற்று அணியினரின் நடவடிக்கைகளை கண்காணித்து தேர்தல் அதிகாரிக்கு புகார் அனுப்பிவருகின்றனர்.
அமைச்சர்கள் வீட்டு திருமணம்
இந்த பரபரப்பான சேலம் மாவட்டத்தை சேர்ந்த, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் இடைப்பாடி பழனிச்சாமி, சுற்றுலாத் துறை அமைச்சர் சண்முகநாதன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் இல்லத் திருமண விழா, சென்னையில், இன்று காலை நடைபெறுகிறது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்கிறார். இதனையொட்டி ஏற்காட்டில் முகாமிட்டிருந்த அமைச்சர்கள், கட்சியினர் அனைவரும் 50 பஸ்களில் சென்னைக்கு பறந்துள்ளனர்.
வாக்காளர்களை வளைக்க
அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், சென்னை சென்றதும், ஏற்காடு தொகுதியில், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் வாக்காளர்களை வளைக்க, தி.மு.க., முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகளை துவக்கியது.
ஆறுமணி நேர ஆபரேசன்
சேலத்தில் இருந்து அமைச்சர்கள், சென்னை வந்து, மீண்டும் ஏற்காடு திரும்ப, குறைந்தது ஆறு மணி நேரத்திற்கு மேலாகும். திருமண விழாவும், ஒரு மணி நேரத்திற்கு மேலாக, நடக்க வாய்ப்புள்ளது. அந்த சந்தர்ப்பத்தில், வாக்காளர்களை வளைக்க, தி.மு.க.,வினர் திட்டமிட்டனர்.அ.தி.மு.க., தொண்டர்களும், திருமண விழாவிற்கு வந்து விடுவர் என்பதால், எதிர்ப்பில்லாமல், தங்கள் பணியை மேற்கொள்ள, தி.மு.க.,வினர் முடிவு செய்தனர். எனவே, ஆறு மணி நேர ஆபரேஷனுக்காக, காத்திருந்தனர்
நொறுக்கிய அதிமுக
இதை அறிந்த, அ.தி.மு.க., தலைமை, "அமைச்சர்களின் இல்லத் திருமண விழாவில், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பங்கேற்கலாம். மற்றவர்கள், ஏற்காட்டில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை தொடர வேண்டும்' என, உத்தரவிட்டது. அதை ஏற்று, அமைச்சர்களைத் தவிர வெளியூர் எம்.எல்.ஏ.,க்கள் பலர், ஏற்காட்டில் முகாமிட்டுள்ளனர்.
ஏமாந்த திமுக
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பொருள் பட்டுவாடா போன்றவைகளை கையும் கையும் வைத்தார்போல் கொடுத்துவிடலாம் என்று எண்ணிய திமுகவினர் எம்.எல்.ஏக்களின் முற்றுகையினால் மூச்சுத் திணறிப் போயுள்ளனராம்.