பேனர் விவகாரம்: தமிழக அரசு மீது ஹைகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
தமிழக அரசு மீது ஹைகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
சென்னை: தமிழக அரசு மீது ஹைகோர்ட்டில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
அண்மையில் கோவையில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக அவினாசி சாலையில் ஏராளமான பேனர்களும் அலங்கார வளைவுகளும் வைக்கப்பட்டிருந்தன.
இந்த அலங்கார வளைவால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி ரகு என்ற மென்பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆனால் ரகு உயிரிழப்புக்கு லாரிதான் காரணம் என கோவை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
அலங்கார வளைவே காரணம்
இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக திமுக எம்எல்ஏ கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரகு உயிரிழப்புக்கு அலங்கார வளைவு தான் காரணம் என தெளிவாக தெரிகிறது என்றது.
பேனர்களை அகற்ற வேண்டும்
மேலும் கோவையில் விதிகளை மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கட்அவுட்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் விதிகளை மதிக்க வேண்டும் என்றும் ஹைகோர்ட் தெரிவித்தது.
பேனர்கள் இன்னும் அகற்றப்படவில்லை
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறியதாக தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ. கார்த்திக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளதாக தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
9 பேர் மீது புகார்
தலைமைச்செயலாளர், கோவை ஆட்சியர், டிஜிபி, கோவை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கோவையில் ரகு என்பவர் சாவுக்கு பேனர்கள் காரணம் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திமுக தொடர்ந்துள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.